செப்டம்பரில் மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க முஹைதீன் தயார்

செப்டம்பரில், பிரதமர் முஹைதீன் யாசின் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை பிரேரணையை எதிர்கொள்வார்.

சற்றுமுன்னர், ஒரு சிறப்பு செய்தியில் அவர் இதனைக் கூறினார்.

பாகோ எம்.பி.யுமான முஹைதீன், தனக்கு இன்னும் பெரும்பான்மை ஆதரவு உள்ளது என்றும், அதே நேரத்தில், கூட்டாட்சி அரசியலமைப்பின் பிரிவு 43 (4)-இன் கீழ் பதவி விலக வேண்டுமெனும் பிரச்சினை எழவில்லை என்றும் வலியுறுத்தினார்.

மக்களவை உறுப்பினர்களிடம் இருந்து பிரகடனக் கடிதம் கிடைத்ததாகவும், இந்த நேரத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கை தனக்கு இருப்பதாக மாட்சிமை தங்கியப் பேரரசரிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

“எனது பிரதமர் பதவி அடிக்கடி கேள்விக்குள்ளாக்கப்படுவதையும் நான் அறிவேன்.

“எனவே, பாராளுமன்றத்தில் பிரதமராக எனது சட்டபூர்வமான தன்மையை நான் தீர்மானிப்பதாக யாங் டி-பெர்டுவான் அகோங்கிற்கு நான் தெரிவித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

“எனவே, பிரதமராக எனது சட்டபூர்வத் தன்மையை நான் நாடாளுமன்றத்தில் தீர்மானிப்பேன் என்று அகோங்கிற்கு நான் தெரிவித்துள்ளேன்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்கு முன்பு, முஹைதீன் இஸ்தானா நெகாராவில் அகோங்கைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது.

மாமன்னரிடம் உரையாற்றிய பின்னர், முஹைதீன் தனது சிறப்பு செய்தியைப் புத்ராஜெயாவில் வழங்கினார்.

தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கும் பிரதமருக்குமான ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அம்னோ நேற்று முடிவெடுத்தபோது, முஹைதீனின் பிரதமர் பதவி கேள்விக்குறியாக மாறியது.

அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடியின் அறிவிப்பின் போது அம்னோ எம்.பி.க்கள் பத்து  பேர் உடனிருந்தனர்.

லெங்கோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஷம்சுல் அனுவார் நசாரா, நேற்று உடனடியாக எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.