‘ஜிஇ14 ஆணையை ‘மீட்டெடுக்க’, இணைந்து வேலை செய்யுங்கள்’ – அன்வர் மற்றும் ஷாஃபியிடம் டிஏபி வலியுறுத்து

பிரதமர் முஹைதீன் யாசினின் பதவி விலகல் மற்றும் அவரது வாரிசு யார் என்பது குறித்த ஊகங்களுக்கு மத்தியில், எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் மற்றும் வாரிசான் தலைவர் ஷாஃபி அப்டால் ஆகியோர் கூட்டாக இணைந்து ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்கி, பக்காத்தான் ஹரப்பானுக்கு மக்கள் கொடுத்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று டிஏபி வலியுறுத்தியுள்ளது.

டிஎபி தலைமை செயலாளர் லிம் குவான் எங், ‘தேசியக் கூட்டணி (பிஎன்) அரசாங்கத்தின் தவறான ஆட்சி’ என்று அவர் கூறியதை எதிர்த்துப் போராட, ஓர் உண்மையான மாற்று முன்வைக்கப்பட வேண்டும் என்றார்.

“105 நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான எதிர்க்கட்சி கூட்டணியின் நேரத்தைப் பி.எச். வீணாக்கக்கூடாது, மாறாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கமாக, அதன் ஆணையைத் திரும்பப்பெற ஒரு ‘பெரிய கூடார’ அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்.

“அடிப்படையில் (எண்ணிக்கை) 105 எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன், பிஎச் பிளஸ் எம்பிக்களை இணைப்பதன் மூலம் மட்டுமே மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சிகளிடம் இருந்து, 2018 ஜிஇ ஆணையைத் திரும்பப் பெற முடியும்,” என்று லிம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

“தோல்வியுற்ற தேசியக் கூட்டணி அரசாங்கத்துடன் இருப்பது நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு அல்ல, ஏனெனில் பிரச்சனை முழு பிஎன் ஆகும்,” என்று லிம் கூறினார்.

இன்று காலை பிஎன் தலைமையகத்தில், பெர்சத்து எம்.பி.க்களைச் சந்தித்தபோது, முஹைதீன் இராஜினாமா செய்வதற்கான தனது விருப்பத்தைத் தெரிவித்ததாகப் பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு கடமைகள்), மொஹமட் ரெட்ஸுவான் யூசோஃப் தெரிவித்தார்.

அவரது இராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டால், முஹைதீன், இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து ஐந்து மாதங்களுக்குள், அதாவது 17 மாதங்கள் மட்டும் (குறைந்த காலம்) பதவியில் இருந்த பிரதமராக இருப்பார்.