#லாவான் போராட்டத்தின் பின்னால் உள்ள முகங்கள்

வாக்களிக்கும் வயது வரம்பைக் குறைப்பதற்கான கோரிக்கையை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப் போவதாக, தேர்தல் ஆணையம் அறிவித்த இரண்டு நாள்களில், இளம் ஆர்வலர்கள் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் கூடியது. முஹைதீன் யாசின் இராஜினாமா செய்வதற்கான அழைப்புகள் உட்பட, இக்குழுவின் பல தொடர் நடவடிக்கைகளின் தொடக்கத்தை இது குறித்தது.

அவர்கள் பின்னர் மக்கள் ஒற்றுமைச் செயலகமாக (எஸ்.எஸ்.ஆர்.) ஒன்றிணைந்தனர், மார்ச் 27 போராட்டம் நடந்து முடிந்த ஒரு வாரம் கழித்தே, அந்தப் பெயர் தோன்றியது என அதன் செய்தித் தொடர்பாளர் முகமட் அஸ்ரஃப் சராஃபி கூறினார்.

“நான் பெர்சே இயக்கத்தைச் சேர்ந்தவன், ஆனால் பெர்சே என்னை எஸ்.எஸ்.ஆர்.-இன் உறுப்பினராக நியமிக்கவில்லை,” என்று அஸ்ரஃப் கூறினார்.

வாக்கு18-இன் இணை நிறுவனர், கயிரா யூஸ்ரி மற்றும் சுவராமின் ஒருங்கிணைப்பாளர் முகமது அப்துல்லா அல்ஷத்ரி ஆகியோரும் இதேக் கருத்தைத் தெரிவித்தனர். இந்த மூன்று பேரும், சமீபத்தில் மலேசியாகினிக்குப் பேட்டி அளித்தார்.

முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு, எஸ்.எஸ்.ஆர். தனது ஆதரவாளர்களை நாடாளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே ஒன்றுதிரட்டி, நோன்புத் துறப்பு மூலம் எதிர்ப்பு தெரிவித்தது – அந்த நேரத்தில், மற்றவற்றுடன், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்துமாறு அது வலியுறுத்தியது.

அதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில், முஹைதீன் இராஜினாமா செய்ய வேண்டும், நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் தொடங்க வேண்டும் மற்றும் வங்கிக் கடன்களுக்கான தடையைத் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன.

அந்த வற்புறுத்தல்கள் நிறைவேறாதபோது, ​​ஜூலை மாதம், இணையம் வாயிலாக “கருப்பு கொடி” பிரச்சாரத்தை எஸ்எஸ்ஆர் தொடங்கியது; இது கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக நடந்த “வெள்ளைக்கொடி” இயக்கத்துடன் தொடர்பில்லாதது என்பது குறிப்பிடத்தக்கது.

#கெலுவார்லாவான் (#KeluarLawan) போராட்டத்தின் வெற்றியை அடுத்து, எஸ்எஸ்ஆர் மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் மீதான போலீஸ் நடவடிக்கை மற்றும் தடுப்புக்காவல் எதிர்பாராத ஒன்று என்றும், விசாரணைக்கு ஒத்துழைப்போம் என்ற உடன்படிக்கைக்கு முரணானது என்றும் அவர்கள் விவரித்தனர்.

குறிப்பாக, முஹைதீனின் இராஜினாமாவைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 21-ஆம் தேதி நடைபெறவிருந்த பேரணியை அவர்கள் இரத்து செய்த பிறகு.

கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக நடைபெற்ற மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற 31 பேருக்கும், ஒவ்வொருவருக்கும் ரிம 2,000 தண்டம் விதிக்கப்பட்டது. அவர்கள் 24 மணி நேரத்திற்குள் 668 பங்களிப்பாளர்களிடமிருந்து RM92,800 நிதியைத் திரட்டினர்.

ஒரு மணி நேர நேர்காணலில், அஸ்ரஃப், கயிரா, முகமது, ஏடி மற்றும் சோங் ஆகியோர் மலேசியாவில் சட்டச் சீர்திருத்தத்திற்கான மிகப்பெரிய கவலையையும் விருப்பத்தையும் தெரிவித்தனர்.

கீழே உள்ள நேர்காணல் பகுதி தெளிவுக்காகத் திருத்தப்பட்டுள்ளது.

நீங்கள் அதிகம் கவலைப்படும் விஷயங்கள் என்ன?

அஸ்ரஃப் : நான் கோவிட் -19 பற்றி கவலைப்படுகிறேன். திடீரென்று ‘போராட்டத் திரளை’ உருவானால், நாங்கள் உண்மையில் எஸ்.ஓ.பி. அமலாக்கத்தில் கவனம் செலுத்தினோம், பங்கேற்பாளர்களின் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த நம்பகமான குழு ஒன்று உள்ளது.

நாங்கள் காவல்துறையை எதிர்கொள்ளும் ஆபத்தில் இருக்கிறோம் என்று எனக்குத் தெரியும், ஆனால் கோவிட் -19 நிலைமைதான் என்னை மிகவும் கவலையடையச் செய்தது. நான் போராட்டத்தை இரத்து செய்ய நினைத்தேன், ஆனால் நண்பர்கள் தொடர வலியுறுத்தினர்.

முகமது : எனது மிகப்பெரியக் கவலை காவல்துறை அடக்குமுறை. ஆர்ப்பாட்டத்தின் போது அல்லது அதற்கு பின்னர் தடுத்து வைக்கப்பட்டது. போராட்டத்திற்கான தயார்நிலை, சமூக இடைவெளியை அமல்படுத்துவதற்கான வழிமுறைகள், ஒழுங்குமுறை பணியாளரின் (மார்ஷல்) தேவை மற்றும் பிற காரணங்களை நான் நினைத்தேன்.

போராட்டத்திற்கு முந்தைய வாரங்களில், பல முறை எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. நான் இதனை உண்மையில் தொடர வேண்டுமா?.. மறுநாள் நான் உறுதியாகத் தொடர வேண்டும் என்று உணர்வேன், ஆனால் அதற்கு மறுநாள் மீண்டும் நான் யோசிப்பேன்.

கயிரா : எனது கவலை என்னவென்றால், நான் போலீசாரால் அழைக்கப்படவில்லை. அதனால் நான் அதைப் பற்றி மிகவும் கவலைபட்டேன். போராட்டத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, (ஆர்வலர்) சாரா இர்டினா கைது செய்யப்பட்டார், அவருக்கு 20 வயதுதான்.

அத்தகைய இளையர்களுக்கு எதிராக அரசாங்கத்தால் அதிகாரத்தைக் காட்ட முடிகிறது என்றால், பேரணியில் முதன் முறையாகப் பங்குபெரும் மற்றவர்களின் நிலை? பெர்சே பேரணிகள் மற்றும் நடைபெற்ற பிற போராட்டங்கள் பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது.

போலீசார் சாராவின் வீட்டிற்கும் சென்றார்கள், அவர்கள் என்னையும் அதே போல் நடத்தினால் எப்படி என்று நான் யோசித்தேன். அவர்கள் என் பாட்டிக்கு மாரடைப்பை ஏற்படுத்திவிடுவார்களோ, அல்லது என் உடன்பிறப்பைப் பயமுறுத்துவார்களோ? இவைதான் என்னுடைய மிகப்பெரிய கவலை.

ஏடி: தொற்றின் போது மக்களை எவ்வாறு நிர்வகிப்பது. நம்மால் கோவிட் -19 தொற்றைப் பார்க்க முடியாது, ஆனால்  ஒரு மோசமான தலைவரைப் பார்க்க முடியும். இரண்டுமே நம் எதிரிகள்.

உங்களால் ஒரு சட்டத்தை இரத்து செய்ய முடியுமென்றால், அந்தச் சட்டம் எதுவாக இருக்கும்?

அஸ்ரஃப் : அமைதி ஒன்றுகூடல் சட்டம் 2012, தேசிய முன்னணி காலத்திலிருந்து அது உள்ளது, பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின் போதும் அது இரத்து செய்யப்படவில்லை.

முகமது : தேசத் துரோகச் சட்டம். பிறரைத் தூண்டிவிட்டனர் என்று சில எஸ்எஸ்ஆர் உறுப்பினர்கள் தேசத் துரோகச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டுள்ளார்கள். இது ஒரு பழமையான சட்டம். ஒரே ஒரு தகவலைச் கீச் (கீச்சகம்) செய்தால் போதும், அடுத்த நிமிடம் ஒருவர் பிரச்சனையில் சிக்கலாம்.

கயிரா : தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998, பிரிவு 233. எங்கள் நண்பர், (புலம்பெயர்ந்தோர் உரிமை ஆர்வலர்) ஹெய்டி குவா குடிநுழைவுத் தடுப்பு முகாமின் நிலைமையை வெளிப்படுத்தியதற்காக, இந்தப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

ஏடி : ஓராங் அஸ்லி சட்டம் 1954. இந்தச் சட்டம் ஒரு முறை மட்டுமே திருத்தப்பட்டது, மேலும், இது ஒராங் அஸ்லி சமூகத்திற்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, அவர்கள் தங்கள் சொந்த முடிவுகளை எடுப்பதைத் தடுக்கிறது.

சோங் : தண்டனைச் சட்டம், பிரிவு 377b, இயற்கைக்கு மாறான உடலுறவு பற்றியது.

எது உங்களை ஒன்றாக வைத்திருக்கிறது?

கயிரா : கோபம்! அது எங்களை ஒன்றாக இணைத்து வைத்துள்ளது. நாங்கள் அனைவரும் ஒரு விஷயத்தை சுயநலத்துடன் பார்ப்பதில்லை, அது ஒரு நல்ல விஷயம். பல பிரச்சினைகள் எழும், அவற்றை யாரும் தனிப்பட்ட முறையில் அணுகாமல், கூட்டங்களில் விவாதிப்போம்.

சமூக ஊடகங்கள் உட்பட, அனைத்திலும் நாங்கள் மிகவும் வெளிப்படையாக இருக்கிறோம். எங்கள் நிலையிலும், எங்கள் நிலைப்பாட்டிலும் நாங்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறோம். எனவே, இளைஞர்கள் எங்களை அறியாவிட்டாலும், எங்களிடையே ஒற்றுமையைக் காண்கிறார்கள்.

ஏடி : கூட்டத்தில் விஷயங்களைக் கலந்துபேசுவதை நாங்கள் உறுதியாகக் கடைபிடிக்கிறோம். உறுதியான கருத்தியல் தளத்தில் நாங்கள் சேர்வதில்லை என்பதும் முக்கியம். ஒவ்வொரு விஷயமும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் கையாளப்படுகிறது.

முகமது : நாங்கள் நிறைய சந்திப்புகளைச் செய்கிறோம், அதனால் எந்தப் பிரச்சனையும் மறைத்து வைக்கப்படுவதில்லை அல்லது அதிருப்தி ஏற்படுவதில்லை.

கயிரா : ஓர் உதாரணம் மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வு. பெரும்பான்மையானவர்கள் வருகை தரவில்லை. ஆனால், டிஏபியைச் சேர்ந்த நளினா நாயருக்கு எதிரான நடவடிக்கை இன்ஸ்தாகிராமில் வெளியிடப்பட்டவுடன், அனைவரும் அணிதிரண்டனர், வழக்கறிஞர்களையும் ஊடகங்களையும் தொடர்பு கொண்டனர்.

நான் ஐபிடியிலிருந்து (மாவட்டக் காவல்துறை) வெளியே வந்தபோது, மிகவும் அதிர்ச்சியடைந்தேன், வெளியில் ஒரு சில வழக்கறிஞர்களும் ஓரிரெண்டு நண்பர்கள் மட்டும்தான் இருப்பார்கள் என்று நான் நினைத்திருந்தேன், ஆனால் அங்கு நிறைய பேர் கூடியிருந்தனர், எஸ்எஸ்ஆர் மிக விரைவாக அணிதிரட்டியது.