‘தெளிவான அறிவுறுத்தல்’ கிடைத்தால், இசி வாக்கு18-ஐ செயல்படுத்த முடியும் – அன்வர் நம்பிக்கை

வாக்கு18-ஐ செயல்படுத்துவதில், தேர்தல் ஆணையத்தின் (இசி) தலைமையை மாற்ற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்த போதிலும், “தெளிவான அறிவுறுத்தல்களை” பெற்றால் சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் இசி சிக்கல்களை எதிர்கொள்ளாது என்று பிகேஆர் நம்புகிறது.

அதன் தலைவர் அன்வர் இப்ராகிம், வாக்கு18-ஐ செயல்படுத்த, தொழில்நுட்பக் காரணங்கள், சட்டத் தடைகள் எனப் பலவற்றைக் கூறி அரசாங்கம் சாக்குப்போக்கு கூற முயல்கிறது என்றார்.

“நான் முன்பு பிரதமரைச் சந்தித்தபோது, ​​இது (வாக்கு18) நிறைவேற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன், இதற்கு அடுத்த பொதுத் தேர்தலுக்கு (ஜிஇ) முன் ஒப்புதல் அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றேன்.

“தேர்தல் ஆணையத்திற்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் கிடைத்தால், அவர்களால் அதை நிறைவேற்ற முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

டிசம்பர் 31-க்குள், வாக்களிக்கும் வயதை 21 வயதிலிருந்து 18 வயதாகக் குறைக்க, அரசுக்கு உத்தரவிட்ட கூச்சிங் உயர் நீதிமன்றத்தின் முடிவை அடுத்து, உடனடியாக அதனைச் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி அன்வர் இவ்வாறு கூறினார்.