மெகா பிபிவி திறக்க வேண்டிய அவசியமில்லை – கைரி

கோவிட் -19 தடுப்பூசி நடவடிக்கைகளைத் தொடர, மெகா தடுப்பூசி மையம் (பிபிவி) திறக்க வேண்டிய அவசியமில்லை; காரணம் பெரும்பாலான மக்கள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுவிட்டனர் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

எனவே, முழுமையாக தடுப்பூசிகளை வழங்கிய பிபிவிகள் மூடப்படத் தொடங்கும் என்றார் அவர்.

“பெரும்பாலான தடுப்பூசி பெற வேண்டியவர்கள் தடுப்பூசிகளைப் பெற்றவுடன், நாம் இனி பெரிய பிபிவி-களை இயக்க வேண்டியதில்லை, ஏனெனில் இது செலவுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கியது. நாளை, நான் சுகாதார அமைச்சு மற்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல்லூடக அமைச்சை (மோஸ்தி) சந்திப்பேன், விடுபட்டவர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் சில பிபிவி-கள் திறக்கப்பட்டிருக்கும்.

“ஏற்கனவே இலக்கை அடைந்துவிட்ட பிபிவிகளைக் கட்டங் கட்டமாக மூடுவதற்கு, நாங்கள் மோஸ்டியுடன் கலந்துரையாடி வருகிறோம்,” என்று உலக வர்த்தக மையத்தில் பிபிவி செயல்பாடுகளின் கடைசி நாளைப் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

கடந்த மே 5 முதல், 150 நாட்கள் செயல்பாட்டிற்குப் பிறகு, உலக வர்த்தக மையத்தின் பிபிவி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.

இளையர்களுக்கான தடுப்பூசி திட்டங்களுக்காக, இன்னும் பல பிபிவிகள் திறந்திருப்பதாகவும், அரசு மற்றும் தனியார் கிளினிக்குகள் மூன்றாம் மருந்தளவு மற்றும் ஊட்ட மருந்தளவு வழங்கும் பிபிவிகளாக மாற்றப்படும் என்றும் கைரி கூறினார்.

செப்டம்பர் 22-ம் தேதி, சுகாதாரத் துணை அமைச்சர் டாக்டர் நூர் அஸ்மி கஸாலி, 410,489 இளையர்கள், கோவிட் -19 தடுப்பூசியின் முதல் மருந்தளவைப் பெற்றுள்ளதாகவும், ஊசி போட்ட இளையர்கள் அனுபவித்த தீவிரப் பக்க விளைவுகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை என்றும் கூறினார்.

  • பெர்னாமா