இட்ரிஸ் ஹரோன் பிஎச் டிக்கெட்டில் போட்டியிடலாம்

சுங்கை உடாங் சட்டமன்ற உறுப்பினர் இட்ரிஸ் ஹரோன், அவரும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் மலாக்கா மாநிலத் தேர்தலில், பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) டிக்கெட்டுகளில் போட்டியிடலாம் என்று சுட்டிக்காட்டினார்.

இட்ரிஸ் எந்தக் கட்சியில் சேருவது என்பதைத் தேர்வு செய்ய முடியாது என்றும் கூட்டணியில் தனது நிலையைத் தீர்மானிக்க பிஎச் தலைமையிடம் இந்த விஷயத்தை விட்டுவிடுவதாகவும் கூறினார்.

நேற்றிரவு, பிஎச் தலைவர் அன்வர் இப்ராஹிமுடனான சந்திப்பில் கலந்து கொண்ட பிறகு, மலேசியாகேஷட் வலைதளத்தால் அறிவிக்கப்பட்டபடி, “நான் பக்காத்தான் ஹரப்பானை நம்புகிறேன்,” என்றார் அவர்.

அன்வருக்கு முன்னிலையிலான அவரது உரையில், முன்னாள் மலாக்கா முதல்வர் தனது மற்றும் மற்ற மூன்று சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவிதியையும் பி.எச்.-இடம் ஒப்படைப்பதாகக் கூறினார்.

“எங்களால் தேர்வு செய்ய முடியாது, எங்கள் தலைவிதியைப் பற்றி சிந்திக்க பி.எச்.-இடம் விட்டுவிடுகிறோம். ஏனென்றால் 15 பேரின் சூழலில் (பி.எச். சட்டமன்ற உறுப்பினர் பிளஸ் 4) ஏற்கனவே ஒரு கூட்டணி இன்று பெரும்பான்மையை உருவாக்குகிறது,” என்று அவர் கூறினார்.

பிஎச் -இல் எந்தக் கட்சியில் அவர் சேரப் போகிறார் என்று கேட்டதற்கு, தான் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று இட்ரிஸ் கூறினார்.

அதேப் பத்திரிகையாளர் சந்திப்பில், மலாக்கா பிஎச் தலைவர் அட்லி ஜஹாரி, இப்போது பிஎச் -ஐ ஆதரிக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் பற்றிய அனைத்து முடிவுகளும் கூட்டணியின் உயர் தலைமைகளிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறினார்.

“பி.எச்.-இல் நாங்கள் பொதுவாக தேசிய அளவில் பிஎச் தலைமை மன்றத்தில் இறுதி செய்வோம் என்பதால் எந்த விவாதமும் இல்லை,” என்று அட்லி பதிலளித்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தலுக்கான நியமன நாள் நவம்பர் 8-ம் தேதியும், வாக்குப்பதிவு நவம்பர் 20-ம் தேதியும் நடைபெறும்.