‘குழாய் இணைப்பு திட்டம் ஏன் புத்துயிர் பெற்றது?’ எம்ஏசிசி விசாரிக்க வேண்டும் – பிஎச்

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதிவேக இரயில் திட்டத்தை (எச்.எஸ்.ஆர்.) நிறுத்திய நிலையில், சபா எரிவாயு குழாய் போக்குவரத்து (திஎஸ்ஜிபி) மற்றும் பல தயாரிப்பு குழாய் இணைப்பு (எம்பிபி) திட்டங்களைப் புதுப்பிக்க முனைந்துள்ள புத்ராஜெயாவின் காரணங்களை விசாரிக்க வேண்டுமென மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை (எம்ஏசிசி) பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) வலியுறுத்துகிறது.

“தோல்வியடைந்த திஎஸ்ஜிபி மற்றும் எம்பிபி திட்டங்களை, முன்னாள் பிரதமர் முஹைதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கம் பிப்ரவரி 10, 2021 அன்று மறுதொடக்கம் செய்தது ஏன் என்பதை எம்ஏசிசி முழுமையாக விசாரிக்க வேண்டும்,” என்று பிஎச் தலைமை மன்றம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் கூட்டணி கட்சித் தலைவர்கள் அன்வர் இப்ராகிம் (பி.கே.ஆர்), முகமட் சாபு (அமானா), லிம் குவான் எங் (டிஏபி) மற்றும் வில்பிரட் மேடியஸ் தங்காவ் (அப்கோ) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பிஎச் ஆட்சி செய்தபோது திஎஸ்ஜிபி மற்றும் எம்பிபி குழாய் இணைப்பு திட்டங்கள் 2018-இல் இரத்து செய்யப்பட்டன.

அவற்றின் கட்டுமானம் முந்தைய தேசிய முன்னணி நிர்வாகத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட இது, நவம்பர் 2016-இல் சீன பெட்ரோலியம் குழாய் இணைப்பு பணியகத்திற்கு இந்த திட்டத்தை வழங்கியது.

இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் ஒரே நோக்கத்துடன், 2016-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிதி அமைச்சின் முழு உரிமையுள்ள துணை நிறுவனமான சூரியா மூலோபாய ஆற்றல் வளங்கள் (எஸ்.எஸ்.இ.ஆர்.) இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியது.

662 கிமீ தூரம் கொண்ட திஎஸ்ஜிபி, கிமானிஸ் எரிவாயு முனையத்தில் இருந்து சண்டகான் மற்றும் தவாவ் வரை நீட்டிக்கப்படும். இதற்கிடையில், 600 கிமீ தூர எம்பிபி மலாக்கா மற்றும் போர்ட்டிக்சனில் உள்ள பல்வேறு பெட்ரோ கெமிக்கல் திட்டங்களை கெடா, ஜித்ராவில் இணைக்கும்.

13 விழுக்காடு பணிகள் மட்டுமே நிறைவடைந்திருந்தாலும், இரண்டு திட்டங்களுக்கும் 8.3 பில்லியன் ரிங்கிட் – கட்டுமான செலவில் 88 விழுக்காடு – கொடுக்கப்பட்டுள்ளது.

2019-இல் குழாய் இணைப்பு திட்டம் தொடர்பான பேங்க் நெகாராவின் நிபந்தனைகளுக்கு இணங்கத் தவறியதற்காக எஸ்.எஸ்.இ.ஆர்.-க்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது.

பிப்ரவரியில், முஹைதீன் இரண்டு திட்டங்களையும் அமைதியாக புதுப்பித்ததாக சமீபத்தில் தெரியவந்தது.

இதற்கிடையில், பன்டோரா பேப்பரை விசாரிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டுமென்றும் எம்ஏசிசியைப் பிஎச் வலியுறுத்தியது.