நாங்கள் உங்களை நிராகரிப்போம் என மாணவர்கள் கெடா மந்திரி புசாரை எச்சரிக்கின்றனர்

ஐந்து மாணவர்களை இடை நீக்கம் செய்துள்ள விவகாரத்தில் கெடா மந்திரி புசார் 1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தைப் பின்பற்றித் தொடர்ந்து கடுமையான போக்கை கடைப்பிடித்தால் அவரை நிராகரிக்கப் போவதாக செல்வாக்கு மிக்க மாணவர் தலைவர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

KUIN எனப்படும் Kolej Universiti Insaniah மாணவர்களுக்கு எதிராக மந்திரி புசார் அஜிஸான் அபு பாக்கார் எடுத்துள்ள சர்ச்சைக்குரிய நிலை அவருடைய போக்கை உணர்த்துவதாக தேசிய பல்கலைக்கழக மாணவர் மன்றத் தலைவர் ஷாஹிட் ஜைனி கூறியுள்ளார்.

“அந்த ஐந்து KUIN மாணவர்களும் இடை நீக்கம் செய்யப்பட்ட விஷயத்தில் கெடா மந்திரி புசார் பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை பயன்படுத்துவதை ஆதரிப்பதுதான் கவலை அளிக்கிறது.”

“மாணவர்களை எதிர்கொள்ளும் முறையில் அஜிஸான் முதிர்ச்சி அடையவில்லை என்பதையும் மாநில தலைமை நிர்வாகி என்னும் முறையில் அவருடைய அகங்காரத்தையும் அது காட்டுகிறது.

அவர் மக்களுடைய அவலங்கள் பற்றி குறிப்பாக அந்த ஐந்து மாணவர்களுடைய நிலை குறித்து கவலைப்படவில்லை என்பதும் தெரிகிறது.”

“மாநில அரசுக்குச் சொந்தமான KUIN கல்லூரி இயக்குநர்கள் வாரியத் தலைவர் என்னும் முறையில் பிரச்னைகளை விவாதித்து புரிந்து கொள்ள தமது விவேகத்தைப் பயன்படுத்தி சமூகமான முறையில் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்.”

“அஜிஸான் பின்பற்றுகின்ற கடுமையான போக்கினால் பல்கலைக்கழக மாணவர்கள் 13வது பொதுத் தேர்தலில் அவரை நிராகரிக்கப் போகின்றனர் நான் நம்புகிறேன்,” என ஷாஹிட் சொன்னார்.

அஜிஸானுடைய போக்கு, அனைத்து மக்களாலும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்ற பக்காத்தான் ராக்யாட் மீது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் ஷாஹிட் தெரிவித்தார்.

1971ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக பல்கலைக்கழகக் கல்லூரிச் சட்டத்தை ரத்துச் செய்ய பக்காத்தானுடைய புக்கு ஜிங்கா வாக்குறுதி அளித்துள்ளதையும் பக்காத்தான் அரசாங்கம் கெடாவில் ஆட்சி புரிவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.