மே பாங்க் வங்கியின் புதிய எஜமானர் ‘1.74 பில்லியன் ரிங்கிட் இழப்பு’ பற்றி விளக்க வேண்டும்

may bankBII என்னும் Bank Internasional Indonesia வங்கியில் உள்ள தனது பங்குகளில் 9  விழுக்காட்டை விற்றதால் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் ‘1.74 பில்லியன் ரிங்கிட்  இழப்பு’ பற்றி புதிதாக நியமிக்கப்பட்ட மே பாங்க் தலைமை நிர்வாக அதிகாரி  அப்துல் பாரிட் அலியாஸ் விளக்க வேண்டும் என டிஏபி பெட்டாலிங் ஜெயா  உத்தாரா எம்பி டோனி புவா கேட்டுக் கொண்டுள்ளார்.

மே பாங்க் விற்பனை செய்த 5,065,380,000 அல்லது 9 விழுக்காடு பங்குகளை  வாங்கியவர் யார் என்ன விலைக்கு விற்கப்பட்டது என்ற விவரங்கள்  வெளியிடப்படவில்லை என அவர் சொன்னார்.

The Edge என்ற வர்த்தக நாளேட்டின் செய்திப்படி அந்தப் பங்குகள் தலா 355  ரூப்பியாவுக்கு விற்கப்பட்டுள்ளன. அந்தப் பங்குகளை தலா 455 ரூப்பியாவுக்கு  மே பாங்க் 2008ல் கொள்முதல் செய்தது.

இழப்பு ஏற்படுமானால் மே பாங்க் இந்தோனிசிய வங்கியில் உள்ள பங்குகளை  விற்காது என அதன் தலைவர் ஜனவரி மாதம் அறிவித்திருந்ததாக புவா  தெரிவித்தார்.

“9 விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதால் மே பாங்கிற்கு
உடனடியாக 157 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்படும் என்றும் மற்ற தெரியாத  அம்சங்களையும் கருத்தில் கொண்டால் இழப்பு 1.74 ரிங்கிட்டாக இருக்கலாம்,”  என்றும் புவா சொன்னார்.