சபா ஆர்சிஐ-யில் சாட்சியமளிக்க முன்னாள் முதலமைச்சர் ஹாரிஸ் மறுப்பு

RCIசபா குடியேற்றக்காரர்கள் மீதான அரச விசாரணை ஆணையத்தின் (ஆர்சிஐ)  முன்பு சாட்சியமளிக்க முன்னாள் சபா முதலமைச்சர் ஹாரிஸ் சாலே எதிர்பாராத  வகையில் மறுத்துள்ளார்

ஏற்கனவே சாட்சியமளித்துள்ள ஹாரிஸ் முன்னாள் சண்டக்கான் மாவட்ட அதிகாரி  ஹசானார் இப்ராஹிம் தெரிவித்த குற்றச்சாட்டுக்களுக்குப் பதில் அளிப்பதற்காக  மீண்டும் அழைக்கப்பட்டிந்தார்.

இன்று காலை சாட்சியமளித்த ஹசானார், வாக்குகளுக்காகக்
குடியேற்றக்காரர்களுக்கு சட்ட விரோதமாகக் குடியுரிமை வழங்கப்பட்டதற்கு  (அடையாளக் கார்டு திட்டம்’ என அழைக்கப்பட்டது) ஹாரிஸ் மீது பழி  சுமத்தினார்.

ஆனால் இன்று பிற்பகல் கோத்தா கினாபாலு நீதிமன்ற வளாகத்தில் ஆர்சிஐ  விசாரணை மீண்டும் தொடங்கிய போது அடுத்த சாட்சியான ஹாரிஸ்  சாட்சியமளிக்க மறுத்து விட்டார்.RCI1

“ஹசானாரின் சாட்சியத்தை மறுக்கப் போவதில்லை என சாட்சி கூறியுள்ளார்,” என  ஆர்சிஐ விசாரணையை நடத்தும் அதிகாரி மனோஜ் குருப், ஆணையத்தின்  தலைவரான முன்னாள் சபா, சரவாக் தலைமை நீதிபதி ஸ்டீவ் சிம்-மிடம்  தெரிவித்தார்.

ஹாரிஸ் இன்று காலை நீதிமன்ற வளாகத்தில் ஆர்சிஐ சாட்சிகளுக்கான அறையில்  தென்பட்டார்.

ஜனவரி மாதம் அவர் ஆர்சிஐ முன்பு சாட்சியமளித்துள்ளார். அடையாளக் கார்டு  திட்டம் இருந்ததாகக் கூறப்படுவதை அவர் மறுத்தார்.

அந்நிய முஸ்லிம்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகளை வழங்குவதை  தீவிரப்படுத்தும் பொருட்டு அப்போதைய உள்துறை துணை அமைச்சர் மெகாட்  ஜுனிட் மெகாட் அயூப்பைச் சந்திக்குமாறு ஹாரிஸ் தமக்கு 1985ல் உத்தரவிட்டதாக  ஹசானார் தமது சாட்சியத்தில் கூறியிருந்தார்.