~இராகவன் கருப்பையா – தொழிலாளர் தின சிறப்புக் கட்டுரை
குடும்பச் சூழலை கருத்தில் கொண்டு, சமகாலத்தில் 3 தொழில்களில் ஈடுபட்ட ஒரு இளைஞர், இலக்கியத் துறையிலும் தீவிர ஈடுபாடு காட்டி, அதிலும் கோலோச்சியது வியக்கத்தக்க சாதனைதான்.
தற்பொழுது கெடா மாநிலத்தின் முன்னணி தமிழ் எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் மணிராமு, தவிர்க்க முடியாதக் காரணங்களால் இடைநிலைப் பள்ளியோடு படிப்பை நிறுத்த நேர்ந்தது.
பினேங், புக்கிட் மெர்த்தாஜாமில் ராஜேந்திரன், மணிமொழி இணையருக்கு 3ஆவது பிள்ளையாகப் பிறந்த அவர், சுங்கை பட்டாணியில் தொழிற்சாலை ஒன்றில் வேளைக்கு அமர்ந்து குறுகிய காலத்தில் மேளாலராக பதவி உயர்வும் பெற்றார்.
இருந்த போதிலும் தொழில்சாலையில் பணி செய்வது அவருக்கு மன நிறைவைத் தரவில்லை. ஏதாவது சுய தொழில் செய்ய வேண்டும் எனும் வேட்கை அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு சுயத் தொழில் செய்யும் நோக்கில், தொழில்சாலை வேலையிலிருந்து ராஜினாமா செய்த அவர், பழைய உலோகங்களை வாங்கி விற்கத் தொடங்கினார்.
“இந்த மறுசுழற்சித் தொழில் இலாபகரமான ஒன்றுதான் எனும் போதிலும், கார் கழுவும் கடை ஒன்றைத் திறக்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவாகும்.”
“அந்த சமயத்தில் உதவிக்கு வேலையாட்கள் இருந்ததால் கார் கழுவும் தொழிலையும் நான் வெற்றிகரமாக நடத்தி வந்தேன்,” என்று கூறும் மணிராமு எழுத்துத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு இலக்கியவாதியாகவும் மிளிரத் தொடங்கினார்.
இதுவரையில் நாவல்கள் மற்றும் குறுங்கதைத் தொகுப்பு உட்பட மொத்தம் 5 நூல்களை அவர் வெளியீடு செய்துள்ளார். அவருடைய படைப்புகளை மலேசியாவில் உள்ள அனைத்து தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள சில சஞ்சிகைகளும் கூட பிரசுரம் செய்துள்ளன.
இரு தொழில்களை வெற்றிகரமாக நடத்தி வந்த சமயத்தில், ‘மினி பஸ்'(Mini Bus) எனப்படும் பள்ளி சிற்றுந்து சேவை நடத்தி வந்த ஒரு நண்பர், மணி ராமுவின் உதவியை நாடினார்.
தனது சிற்றுந்தில் கூடுதலான மாணவர்கள் இருப்பதால் அவர்களில் 5 பேரை காரில் பள்ளிக்கு அனுப்பி உதவுமாறு அந்த நண்பர் கேட்டுக் கொண்டார்.
“இப்படிதான் 3ஆவது தொழில் தொடங்கியது,” என்று கூறும் மணிராமு, நாளடைவில் சுயமாக ஒரு சிற்றுந்தை கொள்முதல் செய்து பள்ளிப் பிள்ளைகளுக்கான போக்குவரத்துச் சேவையையும் வழங்கத் தொடங்கினார்.
எனினும் சுமார் 6 ஆண்டுகளுக்கு முன் உலகை புறட்டிப்போட்ட கோறனி நச்சில் இந்த உழைப்பாளியையும் விட்டு வைக்கவில்லை. அந்த காலக் கட்டத்தில் மறுசுழற்சி தொழிலையும் கார் கழுகும் கடையையும் இழுத்து முட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இருப்பினும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட போது தமது போக்குவரத்துச் சேவைக்கான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் 15 பேர் அமரக்கூடிய சற்று பெரிய சிற்றுந்தை வாங்கி தொழிலை விரிவுபடுத்திய மணிராமுவுக்கு சீதா எனும் மனைவியும் 16 வயதில் ஒரு மகளும் 11 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
“இந்தத் தொழில் மிகவும் கடினமான ஒன்றாகும். காலை 5 மணிக்குத் தொடங்கி மாலை சுமார் 7 மணி வரையில் கூட ஓய்வில்லாமல் வேலை இருந்து கொண்டிருக்கும். அத்தனை பிள்ளைகளையும் பத்திரமாக, பாதுகாப்பாக ஏற்றி, இறக்க வேண்டும்”.
“மதிய உணவுக்குக் கூட போதுமான அவகாசம் இருக்காது. அவசர அவசரமாக உணவருந்திவிட்டு வேலையைத் தொடர வேண்டும்.”
“நினைத்த மாத்திரத்தில் விடுமுறை எடுக்க முடியாது. எனது தாய் மரணமடைந்த தினத்தில் கூட காலையில் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டுதான் இதர வேலைகளை கவனித்தேன்.”
“திடீரென சிற்றுந்து பழுதடைந்தால் கூட உடனடியாக மாற்று ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். பெற்றோர்களிடம் காரணம் சொல்ல முடியாது. பிள்ளைகள் நேரத்தோடு பள்ளிக்குச் சென்றாக வேண்டும்.”
“பெற்றோர்களிடமிருந்து சேவைக் கட்டணத்தை பெறுவது கூட பல வேளைகளில் கடுமையான சவாலாகத்தான் இருக்கும்,” என்று கூறும் மணிராமு, தமது இலக்கிய படைப்புகளுக்கு கெடா மாநில ரீதியில் மட்டுமின்றி தேசிய நிலையிலும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
























