அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ரீசல் மரைக்கான் நைனா மரைக்கான், இஸ்லாமிய சட்டமான ஹுடுட் பற்றி முழுமையாக தெரியாமல் அதை இகழ்ந்து பேசக்கூடாது என பிஎன் பங்காளிக்கட்சியான கெராக்கானை எச்சரித்துள்ளார்.
கிளந்தானில் ஹுடுட்டைச் செயல்படுத்துவது பற்றி ஆராய கூட்டரசு அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டிருப்பதால், கெராக்கான் பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் கருத்துரைப்பதைத் தவிர்க்க வேண்டும் என ரீசல் வலியுறுத்தினார்.
“ஹுடுட் மீது கருத்துரைப்பதில் எல்லைமீறிச் செல்லலாகாது. அது இஸ்லாத்தை அவமதிப்பதாக அமைந்து விடலாம்”, என்றாரவர்.
அண்மையில் கெராக்கான் மகளிர் அணி தலைவர் டான் லியான் ஹோ, ஹுடுட் , பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரைப் பாதுக்காக்கிறது என்று கூறியது ரீசலைச் சினமடைய வைத்துள்ளது.