அனி அரோப்: இனக் கலவரங்களால் அதிக பாதிப்பு சாமான்ய மக்களுக்கே

aniஇனக் கலவரங்களின்போது சாமான்ய மக்களுக்கு ஏற்படும் துயரங்கள் அளவிடற்கரியவை என தெனாகா நேசனல் பெர்ஹாட்(டிஎன்பி) முன்னாள் தலைவர் அனி அரோப் எச்சரிக்கிறார்.

“அது மட்டும் என்றும் நம் அரசியல் விருப்பத்தேர்வாக இருத்தல் கூடாது”, என ‘டான்ஸ்ரீ அனி அரோபின் நினைவுக்குறிப்புகள் (Memoirs of Tan Sri Ani Arope)’ என்னும் நூலில் அவர் கூறியுள்ளார்.

துணிச்சலுடன் பேசும் மலாய் அரசந்திரி என்று பெயர்பெற்றவர் அனி அரோப்.   மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுமான சிறப்புரிமைகள் எப்போதும் ஒரு இக்கட்டான விவகாரம்தான் என்று கூறும் அவர், புதிய பொருளாதாரக் கொள்கையில் உள்ள ஓட்டைகள் அடைக்கப்பட வேண்டும் என விரும்புகிறார்.

“அந்த உரிமைகளால் உண்மையிலேயே தகுதியுடைய மலாய்க்காரர்களும் பூமிபுத்ராக்களும் நன்மை அடைந்தால், மலேசியர்கள் அதை வேறுவிதமாகத்தான் பார்ப்பார்கள்.

“ஆனால்,  சலுகைபெற்ற மலாய்க்காரர்கள் மட்டுமே அந்த உரிமைகளால் நன்மை அடைந்திருக்கிறார்கள். கிராமப்புற மக்களுக்கும் உண்மையிலேயே உதவிதேவைப்படுவோருக்கும் அதிலிருந்து உதவி கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் கிடைப்பது குறைவே”, என்றாரவர்.

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், சுயேச்சை மின் உற்பத்தியாளர்களைக்(ஐபிபி) கொண்டு வந்தபோது அதற்குத் துணிச்சலாக எதிர்ப்புத் தெரிவித்தவர் அனி.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் தாம் டிஎன்பி தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணத்தை அவர் வெளியிட்டபோது அவரின் முகநூல் வாசகர்களில் ஒருவரான ஷரிமான் என்பார், “எங்கள் நன்மைக்காக நீங்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த டாக்டர் எம்மை எதிர்த்து நின்றதை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.

“அதன் விளைவுகளையும் சந்திக்க தயாராக இருந்தீர்கள். மகத்தான மனிதர்கள் அப்படித்தான் செய்வார்கள்”, என்று குறிப்பிட்டிருந்தார்.