தீபாவின் மகன் கடத்தல்: ஐஜிபி கடுமையாகச் சாடப்பட்டார்

 

convertஇந்து தாயார் தீபாவின் மகனை இஸ்லாமியராக மதம் மாறி விட்ட அவரது முன்னாள் கணவர் இஸ்வான் என்ற வீரன் கடத்திச் சென்று விட்ட சம்பவம் மீது போலீஸ் படையின் தலைவர் காலிட் அபு பக்காரின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

இரு நீதிமன்றங்கள், ஒன்று சிவில் நீதிமன்றம் மற்றொன்று ஷரியா நீதிமன்றம், இவ்விவகாரத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளன. இரண்டிற்கும் தாங்கள் கட்டுப்பட்டவர்கள். ஆகவே, இதனை போலீஸ் விசாரிக்கவில்லை என்று ஐஜிபி காலிட் நேற்று கூறியிருந்தார்.

“எது மலேசியாவின் உயர்நீதிமன்றம், சிவில் நீதிமன்றமா அல்லது ஷரியா நீதிமன்றமா என்று ஐஜிபியை சாடிய மீபாஸ் தலைமைச் செயலாளர் எஸ். பாரதிதாசன் கேட்டுள்ளார்.

ஐஜிபியின் அறிக்கை தம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்று கூறிய அவர், இச்சம்பவம் முற்றாக மாறி கடத்தலைச் செய்தது ஓர் இந்து தாயாராக இருந்தால், காலிட் இப்படி கூறுவாரா?”, என்று வினவினார்.

கடந்த திங்கள்கிழமை உயர்நீதிமன்றம் தீபாவுக்கு அவரது இரு குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமையயை வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால், கடந்து ஆண்டு இவ்வுரிமையை ஷரியா நீதிமன்றம் அக்குழந்தைகளின் இஸ்லாத்திற்கு மதம் மாறி விட்ட இஸ்வான் என்ற வீரனுக்கு அளித்திருந்தது.

நீதிபதி ஸபாரியா முகமட் யுசுப், தீபாவுக்கு சாதகமாக வழங்கிய தீர்ப்பு சிவில் சட்ட அடிப்படையிலாகும்.

இத்தீர்ப்பு வழங்கப்பட்ட இரு நாள்களுக்குப் பின்னர் தீபாவின் முன்னாள் கணவர் இஸ்வான் என்ற வீரன் அவர்களுடைய மகனை கடத்தி சென்றார் என்றும் அதனைத் தடுக்க முயன்ற தீபா தாக்கப்பட்டார் என்றும் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஐஜிபி தவறு செய்து விட்டார்

இன்றைய த ஸ்டார் நாளிதழ் செய்தியின்படி, இரு முன்னாள் சட்ட அமைச்சர்கள் போலீஸ் படைத் தலைவர் தவறு செய்து விட்டதாகக் கூறினர்.

தீபாவின் திருமணம் சிவில் சட்டத்திற்கு உட்பட்டது. “உயர்நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பு சரியானது”, என்று முன்னாள் சட்ட அமைச்சர் நஸ்ரி அப்துல் அசிஸ் கூறினார்.

“ஒரு குழந்தையை கடத்திச் சென்றதிலிருந்து தப்பிக்க அவரை போலீசார் அனுமதிக்கக்கூடாது”, என்று அவர் கூறியதாக செய்தி கூறுகிறது.

“அவர்கள் (போலீசார்) இரு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும் மதிப்பதாகவும் ஆகவே ஒன்றும் செய்யப் போவதில்லை என்று கூறுவது பொறுப்பற்ற செயலாகும் என்பதோடு அவர்கள் மீது தவறான தோற்றத்தை உருவாக்கும்”, என்று இன்னொரு முன்னாள் சட்ட அமைச்சரான ஸைட் இப்ராகிம் கூறியுள்ளார்.