ஹாடி எம்பி பதவிக்கு 3 பாஸ் ஆட்சிக்குழு உறுப்பினர்களை நியமித்துள்ளார்

Hadi's 3

சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான போராட்டத்தில் தோன்றியுள்ள ஒரு புதிய திருப்பம் சிக்கலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. பாஸ் அதன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மூவரின் பெயரை தாக்கல் செய்துள்ளது.

பக்கத்தான் ரக்யாட் கட்சிகள் செப்டெம்பர் 3 க்குள் அவற்றின் மந்திரி புசார் பதவிக்கான வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று அரண்மனை நிர்ணயித்திருந்த தேதிக்கு முன்னதாகவே பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் பெயர்களை கடிதம் வழி அனுப்பி விட்டதாக த ஸ்டார் ஓன்லைன் செய்தி கூறுகிறது.

வட்டாரங்களை மேற்கோள் காட்டி அச்செய்தி சிலாங்கூர் பாஸ் தலைவர் இஸ்கந்தர் அப்துல் சாமாட், சாலேஹின் முக்ஹி மற்றும் அஹமட் யுனுஸ் ஆகியோரின் பெயரை வெளியிட்டுள்ளது.

ஆனால், பெயரை வெளியிட விரும்பாத ஒரு மூத்த பாஸ் தலைவர் அந்த அறிக்கையை மறுத்தார்.

“இது (அரண்மனைக்கு கடிதம் அனுப்பியது) உண்மையல்ல. அது (கடிதக்) ரத்து செய்யப்பட்டு விட்டது”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இன்னொரு பாஸ் தலைவர் டாக்டர் டிஸுல்கிப்லி “இது எங்களுக்கும் செய்தியாகும்…உண்மை இல்லை என்று கருத வேண்டும்”, என்று டிவிட் செய்துள்ளார்.

இதனிடையே, பிகேஆரின் துணைத் தலைவர் அஸ்மின் அலிக்கு நெருக்கமான வட்டாரம் இது பற்றி ஏதும் தெரியாது என்றது.

“எங்களுக்குத் தெரிந்தது எல்லாம் பாஸ் மூன்று பெயர்களை அனுப்பியுள்ளது. அஸ்மின், அஸிசா மற்றும் இஸ்கந்தார் நியமிக்கப்பட்டனர்”, என்றாரவர்.

கடந்த சில வாரங்களில், இந்த விவகாரத்தில் பாஸ் எடுத்துள்ள முரண்பாடான நிலை பக்கத்தானில் அதன் இணைப்பை பாதித்துள்ளது.