அசிஸ் பாரி மீது கேள்விகளைப் பொழிந்தனர், ஆனால் பதில் கிடைக்கவில்லை

 

Aziz Bari grilled1தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் போலீசார் இன்று அரசமைப்புச் சட்ட வல்லுனரும் சட்ட பேராசிரியருமான அப்துல் அசிஸ் பாரியிடம் ஒரு மணி நேரத்திற்கு கேள்விகள் கேட்டனர். அவர் எதற்கும் பதில் அளிக்கப் போவதில்லை என்ற முடிவுடன் அமைதியாக இருந்தார்.

திடிரென்று அசிஸுக்கு எதிராக ஏகப்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன. அவரை போலீசார் சபாக் பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் விசாரித்தனர்.

குற்ற நடவடிக்கை சட்டம் செக்சன் 112 விசாரிக்கப்படுபவரை குற்றவாளியாக்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் இருக்க அனுமதிக்கிறது. அதன் கீழ் அசிஸ் பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தார் என்று அவரின் வழக்குரைஞரான அபிக் எம் நூர் கூறினார்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தங்களுக்குத் தெரியாது. போலீசார் தங்களுக்கு தெரிவிப்பார்கள் என்று அபிக் மலேசியாகினியிடம் கூறினார்.

அசிஸுக்கு எதிராக குற்றம் சாட்டப்படும் என்று போலீசார் கூறவில்லை என்று இன்னொரு வழக்குரைஞரான தீராஜ் மலேசியாகினியிடம் தெரிவித்தார். “மேலிடத்து உத்தரவின்படி” இந்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்று போலீஸ் தெரிவித்ததாக அவர் மேலும் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்டால், அசிஸ் இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படும் இரண்டாவது அறிவுக்கழகத்தினராவார். மலாயா பல்கலைக்கழக சட்ட இணைப் பேராசியர் அஸ்மி ஷரோம் செப்டெம்பர் 2 இல் குற்றம் சாட்டப்பட்டார்.

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் செய்யப்படும் புகார்கள் உடனடியாக, முடிந்தால் 24 மணி நேரத்திற்குள், விசாரிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கடந்த வாரம் சூளுரைத்திருந்தார்.

அதன் பின்னர், உள்துறை அமைச்சரான அஹமட் ஸாகிட் ஹமிடி மற்றும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் ஆகியோருக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டன. போலீஸ் விசாரணை ஏதும் நடைபெறவில்லை.