1எம்டிபி போஸ்: சிக்கல்களை அறிந்தே பொறுப்பேற்கிறேன்

arulஅரசாங்கத்துக்குச்  சொந்தமான 1மலேசியா மேம்பாட்டு  நிறுவனம் (1எம்டிபி)  நிதிப்  பிரச்னைகளால்  தட்டுத்  தடுமாறிக்  கொண்டிருக்கிறது.

பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  மிகுந்த நம்பிக்கையுடன்  தோற்றுவித்த  அந்த  முதலீட்டு  நிறுவனத்துக்குப்  புதிய  தலைமை  செயல்  அதிகாரியாக  நியமிக்கப்பட்டிருக்கிறார் அருள் கந்தா  கந்தசாமி.

1எம்டிபி  எதிர்நோக்கும்  சிக்கல்கள்  ஒன்றல்ல, இரண்டல்ல. அதன்  பிரச்னைகளுக்குத்  தீர்வுகண்டு  அதை நல்ல  நிலைக்குக்  கொண்டுவர  அருளால்  முடியுமா?

“அந்த  நம்பிக்கை  இல்லையென்றால்  இப்பொறுப்பை  ஏற்றிருக்க  மாட்டேன்”, என்கிறார்  அருள். மலேசியாகினிக்கு  அனுப்பிய  குறுஞ்செய்தியில்  அவர்  இந்த  நம்பிக்கையைத்  தெரிவித்திருந்தார்.

“எந்த  நிறுவனமும்,  அது  பன்னாட்டு நிறுவனமாயினும்   தெருக்கோடியில்  உள்ள  சிறிய  கடையாயினும்  அவ்வப்போது  பிரச்னைகளை  எதிர்நோக்கத்தான்  வேண்டியிருக்கும். 1எம்டிபி-இன்  நிலையும்  அதுதான்.

“….ஆனால், அவற்றுக்குத்  தீர்வு  காண  முடியும்  என்று  நம்புகிறேன்”, என்றாரவர்.

அருள், லண்டன்  யுனிவர்சிடி கல்லூரியில்  நிறுவன,  வர்த்தக  சட்டத்தில்  முதுகலை  பட்டம் பெற்றவர். 2008-இலிருந்து  அபு  தாபி  கமர்சியல்  வங்கியின்  உதவித்  தலைவராகவும்  அதன்  நிறுவன  நிதிப்  பிரிவின்  தலைவராகவும்  இருந்து  நிதியியல்  துறையில்  நல்ல  அனுபவம்  பெற்றவர்.