அம்னோ தலைவர்கள் பிரதமரைச் சந்திப்பதில் விசேஷம் எதுவுமில்லை

shafஞாயிற்றுக்கிழமை  அம்னோ  தொகுதித்  தலைவர்கள் கட்சித்  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைச்  சந்திப்பது  வழக்கமான  ஒன்றுதான்  என்கிறார்  அம்னோ  உதவித்  தலைவர்  ஷாபி  அப்டால்.

இப்படிப்பட்ட  கூட்டங்களை அம்னோ  எப்போதுமே  நடத்தி  வந்துள்ளது.  தொகுதித் தலைவர்களைச்  சந்திப்பது  வழக்கமான  ஒன்றுதான்”, என்று  ஷாபி  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.

நடப்பு  விவகாரங்களை  அடிநிலை  தலைவர்களுக்கு விளக்குவதற்காக  அக்கூட்டம்  நடத்தப்படுவதாக  கிராம, வட்டார  மேம்பாட்டு  அமைச்சருமான  அவர்  கூறினார்.

“கட்சிக்குள்ளும்  புறமும்  எழுப்பப்படும்  விவகாரங்களால்  குழப்பம்  ஏற்படாதிருக்கத்  தொகுதித்  தலைவர்களுக்கு  விளக்கமளிக்கப்பட  வேண்டும்”,  என்றாரவர்.

1மலேசியா  மேம்பாட்டு  நிறுவனத்தின்  நிதிப்  பிரச்னைகள்  போன்ற  விவகாரங்களின்  விளைவாக  நஜிப்மீது  தாக்குதல்கள்  பெருகிவருவதால்தான் ‘பிரதமருடன் ஒன்றுபட்டிருத்தல்’  என்னும்  இக்கூட்டம்  நடத்தப்படுவதாக  வதந்திகள்  உலவுகின்றன.

1எம்டிபி  நிறுவனத்துக்கு  ரிம3 பில்லியன்  கடனளிக்கும்  பரிந்துரை  ஒன்றை  அமைச்சரவை  நிராகரித்து  விட்டதாகக் கூறப்படுவது  பற்றியும்  ஷாபியிடம்  வினவப்பட்டது.

அதற்கு  அவர்  பதிலளிக்க  மறுத்து  விட்டார்.