சுஹாகாம் இஸ்ஸாவைக் கைது செய்த போலீசைச் சாடியது

hasmiமலேசிய  மனித  உரிமை  ஆணையம், போலீஸ்  லெம்பா  பந்தாய்  எம்பி  நூருல் இஸ்ஸா  அன்வார்  நாடாளுமன்றத்தில்  ஆற்றிய  உரைக்காக  அவர்மீது  தேச  நிந்தனைச்  சட்டத்தைப்  பயன்படுத்தி  இருப்பது  நாடாளுமன்றச்  சலுகைகளை  மீறும்  நடவடிக்கையாகும்  எனக்  கூறியது.

அதிகாரிகள்  நாடாளுமன்றச்  சலுகைகளை மதிக்க  வேண்டும்  சுஹாகாம்  தலைவர்  ஹஸ்மி அகாம்  ஓர்  அறிக்கையில்  கூறினார். அப்போதுதான்  நாடாளுமன்ற  உறுப்பினர்களால்  அச்சமோ  விருப்புவெறுப்போ  இன்றி தங்கள்  கடமைகளைச்  செய்ய  முடியும்.

“நாடாளுமன்றத்தில்  கருத்துச் சுதந்திரம்  வேண்டும்  என்பதையும்  அதை  அடிப்படையாக  வைத்து  குற்றவியல்  நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்படக்கூடாது  என்பதையும்  ஆணையம்  வலியுறுத்த விரும்புகிறது.

“எனவே, எம்பிகளுக்கு குற்றவியல் வழக்குகள்,  சிவில்  வழக்குகள், மிகையான  ஒழுங்கு  நடவடிக்கை போன்றவற்றினின்றும்  விலக்களிக்கப்படும்  என்ற  உத்தரவாதம்  தேவை”, என  ஹஸ்மி  குறிப்பிட்டார்.