உறுப்பினர்கள் 55-இல் இபிஎப் பணத்தை மீட்டுக்கொள்ளலாம்: பிரதமர் உத்தரவாதம்

epfஊழியர்  சேமநிதி  வாரிய(இபிஎப்)  உறுப்பினர்கள் 55வது  வயதில்  அவர்களின்  சேமிப்பை  மீட்டுக்கொள்ள  முடியும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  உததரவாதம்  அளிக்கிறார்.

“இபிஎப்  உறுப்பினர்கள் 55 வயதில் பணத்தை  மீட்டுக்கொள்ளும்   உரிமை  தக்க வைத்துக்கொள்ளப்படும்  என்று  உத்தரவாதம் அளிக்கிறேன்”, என  நஜிப்  இன்வெஸ்ட்  மலேசியா  2015  நிகழ்வில் அறிவித்தார். அந்த  அறிவிப்பைப்  பலத்த  கைதட்டலுடன்  கூட்டத்தினர்  வரவேற்றனர்.

முன்னதாக,  நஜிப்  இபிஎப்-பிலிருந்து  பணத்தை  மீட்டுக்கொள்ளும்  கொள்கைகளில் ஏற்படக்கூடிய  மாற்றங்கள்  குறித்து  பொதுமக்கள்  கவலை  கொண்டிருப்பதை  அறிந்திருப்பதாக  கூறினார்.

அதன் தொடர்பில்  பொதுமக்களின்  கருத்தை  அறிவதற்காக  உருவாக்கப்பட்ட  ஒரு  இணையத்  தளத்தில்  50,000  மலேசியர்கள்  தங்களின்  கருத்துகளைப்  பதிவு  செய்திருந்தனர்.

“இந்த  அரசாங்கம் மக்களின்  கருத்துகளை  எப்போதுமே  காது  கொடுத்துக்  கேட்கிறது. இபிஎப்  உறுப்பினர்களில்  பெரும்பாலோர்  60-வயதில்  ஓய்வுக்கால  சேமிப்பு  தேவை  என்பதை  உணரும்  வேளையில்  55-வயதில் ஓய்வுக்கால  சேமிப்புப்  பணத்தை  மீட்டுக்கொள்ளும்  உரிமையும் வேண்டும்  என விரும்புவது  தெளிவாக  தெரிகிறது”, என்றாரவர்.

இபிஎப்  பணத்தை  முழுமையாக  மீட்டுக்கொள்ளும்  வயதை  55-இலிருந்து  60ஆக  உயர்த்துவது  பற்றி  ஆராய்ந்து  வருவதாக  இபிஎப்  அறிவித்ததை  அடுத்து நஜிப்  இவ்வாறு  அறிவித்துள்ளார்.