மகாதிர்: ரோஸ்மா அவர்தான் பிரதமர் என்பது போல் நடந்து கொள்கிறார்

 

mandrosmahடாக்டர் மகாதிர் மீண்டும் பிரதமர் நஜிப்பின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் மீது குறிவைக்கிறார்.

ரோஸ்மாவை பற்றி தாம் பல புகார்களைப் பெற்றுள்ளதாக கூறிய மகாதிர், அவற்றுள் ஒன்று அவர்தான் பிரதமர் என்பது போல் நடந்துகொள்வதாகும் என்றார்.

அவரை பற்றி புகார் கூறியவர்கள் மலாய்க்காரர்களும் அம்னோ உறுப்பினர்களும் மட்டுமல்ல, சீனர்களும் அதில் அடங்கும் என்றார்.

“நஜிப்பின் துணைவியாரின் ஊதாரித்தனமான வாழ்க்கை முறை மற்றும் அவர்தான் பிரதமர் போல் நடந்துகொள்ளும் முறை பற்றி அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை”, என்று மகாதிர் அவருடைய மிக அண்மைய வலைத்தள பதிவில் கூறியுள்ளார்.

நஜிப்பின் தலைமைத்துவம் குறித்து பல்வேறு தரப்பினர் கவலை தெரிவித்துள்ளதோடு அது குறித்து ஏதாவது செய்யுமாறு தம்மை வற்புறுத்தியுள்ளனர் அவர் கூறிக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து தாம் நஜிப்புக்கு ஆலோசனை கூறியதோடு கண்டித்தும் உள்ளதாக கூறிய மகாதிர், அவை பயனற்றதாக இருக்கிறது என்றார்.

“அவர் (நஜிப்) பணம் கொடுப்பது மக்களை இணங்க வைக்கும் என்ற அவருடைய போக்கில் நம்பிக்கையுடையவராக இருக்கிறார். மக்கள் அவரை நேசிக்கின்றனர் என்று அவர் உண்மையிலேயே நம்புகிறார்.

“ஏதாவது செய்யுங்கள் என்று தம்மிடம் பலர் கேட்டுக் கொண்டுள்ளனர். நான் செய்துள்ளேன், ஆனால் அதனால் பலன் ஏதும் இல்லை என்று அவர்களுக்கு பதில் அளித்துள்ளேன்”, என்று மகாதிர் மேலும் கூறினார்.