விலைவாசி உயர்வுக்கு வியாபாரிகள்மீது பழிபோடும் பிரதமர் ஒரு கபடதாரி

tellபொருள், சேவை  வரி  நடைமுறைக்கு  வந்த  பின்னர்  விலைகள்  உயர்வதற்கு  வியாபாரிகளே  காரணம் என்று  பழியை  அவர்கள்மீது  போட  முயலும்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  ஒரு  “கபடதாரி”  என்கிறார்  பெட்டாலிங்  ஜெயா  உத்தாரா  எம்பி  டோனி  புவா.

சர்ச்சைக்குரிய  வரி  தொடர்பில்  புத்ரா  ஜெயாவை  குறைகூறும்போது  அது  பழியை வியாபாரிகள்மீது  திருப்பி  விடுவதை  வாடிக்கையாகக்  கொண்டிருக்கிறது  என்று  கூறும்  புவா,  அரசாங்கம்  தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம்  மட்டும்  வேறு  விதமாக  நடந்து  கொள்கிறது  என்றார்.

முன்கட்டண  அட்டைகள்மீதான  ஆறு  விழுக்காடு  வரியைப்  பயனீட்டாளர்கள்மீது  சுமத்த  தொலைத்தொடர்பு  நிறுவனங்கள் ஒன்றுகூடி  முடிவு  செய்தபோது  அந்த  வஞ்சகக்  கூட்டுக்கு  புத்ரா  ஜெயா  ஆசி  கூறியதை  புவா  சுட்டிக்காட்டினார். இதற்குமுன்பு விற்பனை, சேவை  வரி (எஸ்எஸ்டி), இப்போது  அது இரத்துச் செய்யப்பட்டு  விட்டது-  அமலில்  இருந்தபோது  அவ்வரியை அந்நிறுவனங்களே  ஏற்றுக்கொண்டன.

“அளவுக்கு  அதிகமாக  ஆதாயம்  கண்டுவரும்  இந்த  நிறுவனங்கள்  கூடுதலாக ரிம770 மில்லியன்  இலாபம்  பெற  பிஎன்  அரசாங்கம்  உதவுவது  ஏன்?”, என்று  புவா  வினவினார்.

“உள்நாட்டு  வாணிக (கூட்டுறவு, பயனீட்டாளர்)  அமைச்சு  ரொட்டி  செனாய் விலையில்  30  சென்  உயர்த்தும்  உணவகங்களைத்  தண்டிக்க  முயல்கிறது, நஜிப்  அரசாங்கமோ  எதிர்பாராத வகையில்  ரிம770 மில்லியன்  ஆதாயம்  கண்டுள்ள  டெல்கோ  நிறுவனங்களைக்  கட்டித்  தழுவுகிறது.”, என்றாரவர்.