அண்மைய வால் ஸ்திரிட் ஜர்னல் (WSJ) செய்திகள் தனது இடைக்கால கணக்காய்வு அறிக்கையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல என்று தேசிய கணக்காய்வுத் துறை கூறியுள்ளது.
“WSJ செய்திக்கும் 1எம்டிபி இடைக்கால கணக்காய்வு அறிக்கைக்கும் தொடர்பில்லை. தேசிய கணக்காய்வுத் துறையிலிருந்து WSJ-க்கு எந்தவொரு செய்தியும் சென்றதில்லை”, என அத்துறையின் ஆய்வுப் பிரிவு துணை இயக்குனர் மசியா அஹ்மட் மலேசியாகினிக்கு மின்னஞ்சலில் அனுப்பிய பதிலில் கூறினார்.
1எம்டிபி-இன் யுஎஸ்$700 மில்லியன் நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றிவிடப்பட்டிருப்பது மலேசிய விசாரணையாளர்களின் ஆவணங்களிலிருந்து தெரிய வந்திருப்பதாக WSJ கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
நஜிப் அதை மறுத்தார். WSJ அந்தச் செய்தி உண்மையானது என்கிறது.
1எம்டிபி-இல் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பதாக பரவலாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் கணக்குவழக்குகளை ஆராயுமாறு கணக்காய்வுத் துறையை நஜிப் பணித்தார்.
கணக்காய்வுத் துறையின் இடைக்கால அறிக்கை வியாழக்கிழமை பொது கணக்குக் குழுவிடம் கொடுக்கப்படும் எனத் தெரிகிறது. ஆனால், அது பொதுமக்களின் பார்வைக்கு வருவது சந்தேகமே.