கிட் சியாங்: நஜிப் தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைப் போக்கிக் கொள்ள அருமையான மேடை

kitடிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங், முற்போக்கு  நாடாளுமன்ற  உறுப்பினர்களின்  கூட்டத்தில்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அவசியம்  கலந்துகொள்ள  வேண்டும்  என  அழைப்பு  விடுத்துள்ளார். வால் ஸ்திரிட்  ஜர்னல்  சாட்டியுள்ள  குற்றச்சாட்டுகளை  விலக்கித்   தம் பெயருக்கு ஏற்பட்டுள்ள  களங்கத்தைப்  போக்கிக்  கொள்ள  நஜிப்புக்கு  அது  ஒரு  நல்ல  வாய்ப்பாக  அமையும் என்றாரவர்.

முற்போக்கு  நாடாளுமன்ற  உறுப்பினர்களின்  அக்கூட்டம் நாளை  நண்பகல்  நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

1எம்டிபி-இன்  யுஎஸ்$700 மில்லியன்  நஜிப்பின்  சொந்த  வங்கிக்  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டிருப்பது  மலேசிய  விசாரணையாளர்களின்  ஆவணங்களிலிருந்து  தெரிய  வந்திருப்பதாக  WSJ  கடந்த  வாரம்  செய்தி  வெளியிட்டிருப்பதைக்  கண்டு  பொறுப்பும்  நாட்டுப்பற்றும்  கொண்ட  எம்பிகள்  வருத்தமும்  அதிர்ச்சியும்  அடைந்திருப்பதாக  கேளாங்  பாத்தா  எம்பியுமான  லிம்   ஓர்  அறிக்கையில்  கூறினார்.

இக்குற்றச்சாட்டுகளால்  உலக  அரங்கமே  பரபரப்படைந்துள்ள  வேளையில்  மலேசியாவில்  மட்டும்  அரசாங்கத் தலைவர்களும்  அமலாக்கத்  துறைகளும் எதுவுமே  நடக்காததுபோல்  பாவனை  செய்து கொண்டிருப்பது  ஏன்  என  லிம்  வினவினார்.

இங்கிருந்து  மலேசியா, குறிப்பாக  மலேசிய  அரசாங்கம்  அடுத்து  எங்கு  செல்லும்? அனைத்துலக  அரங்கில்  மலேசியர்கள்  எப்படி  தலைநிமிர்ந்து  நடக்கப்போகிறார்கள்?

இக்கேள்விகள்  நாளைய கூட்டத்தில்  அலசி  ஆராயப்படும்  என்றாரவர்.

முற்போக்கு  எம்பிகள்  WSJ செய்தி “உண்மை” “பொய்”  என்ற  முடிவுக்கு  வந்தவர்களாக  அல்லாமல்  திறந்த  மனத்துடனேயே அக்கூட்டத்தில்  கலந்து  கொள்கிறார்கள்.

நஜிப், அவர்மீது  சுமத்தப்பட்டிருக்கும்  களங்கத்தைப்  போக்கிக்  கொள்ள  அக்கூட்டத்துக்கு  வரத் தயாரா?  என்று  லிம்  வினவினார்.