நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய 1எம்டிபி விவகாரம் பற்றி எம்பிகள் கூட்டம் நடத்துவதற்கு முன்னதாக போலீஸ் பாதுகாப்பைக் கடுமையாக்கி இருந்தனர்.
எம்பிகள் கூடிப்பேச ஓர் அறைகூட கிடைக்கவில்லை என பாண்டான் எம்பி ரபிஸி ரம்லி கூறினார்.
எம்பிகள் பயன்படுத்த நினைத்த மண்டபத்தை இளைஞர், விளையாட்டு அமைச்சு ஏற்கனவே முன்பதிவு செய்திருந்தது.
எனவே. எம்பிகள் நாடாளுமன்ற சதுக்கத்தில் நிழலாக இருந்த ஒரு பகுதியில் தங்கள் கூட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.
எம்பிகள் கூட்டத்துக்கு எதிரணித் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் ஏற்பாடு செய்திருந்தார்.
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு கெடுபிடி அதிகமாகவே இருந்தது என கேளாங் பாத்தா எம்பி லிம் கிட் சியாங் டிவிட்டரில் கூறியிருந்தார்.
“நாடாளுமன்றத்தில் அளவுக்கு அதிகமான பாதுகாப்பு கெடுபிடி. ஏன்? நஜிப்புக்கு எதிரான WSJ(வால் ஸ்திரிட் ஜர்னல்) -இன் குற்றச்சாட்டு குறித்து எம்பிகள் என்ஜிஓ-க்களுடன் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அதனால்தான்”, என்று லிம் குறிப்பிட்டார்.
இதனிடையே, பினாங்கில் பல என்ஜிஓ-க்கள் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தடுக்க வேண்டும் எனக் கோரி போலீசில் புகார் செய்ததாக அங்கிருந்த வந்த செய்திகள் கூறின.
ஆனால், இன்று மகாதிர் நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் திட்டம் ஏதுமில்லை என்று மகாதிர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மரத்தடி நிழலில் பேராக் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் போட்டது உலகவில் பரவியது அன்று. இன்றோ இந்நாட்டு மக்களவை உறுப்பினர்களுக்கே இந்த கதி என்றால் மக்களுக்கு என்ன கதியோ?. ஜனநாயகமாம். சட்டங்களை இயற்றும் நாடாளுமன்றமாம், நடுத்தெருவில் உட்கார்ந்து கூட்டம் போடும் உறுப்பினர்களாம். உருபட்ட மாதிரிதான் இந்த நாடு.
நாட்டின் ஜனநாயகம் சந்தி சிரிக்கிறது பலே….!