ஹரி ராயா உபசரிப்புக்கு அன்வாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் பிரதமர்

hariபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்,  சிறையில்  உள்ள  அன்வார்  இப்ராகிமுக்கு வெள்ளிக்கிழமை  ஹரி  ராயா  திறந்த  இல்ல  உபசரிப்பில் கலந்துகொள்ள  அழைப்பு  அனுப்பி  வைத்துள்ளார்.

அன்வாரின்  முகநூல்  பக்கத்தில்  அந்த  அழைப்பு  பதிவேற்றம்  செய்யப்பட்டிருந்தது. அன்வாரின்  மனைவி  டாக்டர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்  பிகேஆர்  தலைவர், நாடாளுமன்றத்தில்  எதிரணித்  தலைவர்  என்ற  வகையில்  அவருக்கு  அழைப்பு  அனுப்புவது  சரியே.

ஆனால், ஐந்தாண்டுச்  சிறைத்தண்டனை  பெற்று  சிறையில்  உள்ள  அன்வாருக்கு  அழைப்பு  அனுப்பப்பட்டிருப்பதைக்  கண்டு  இணையவாசிகள்  கடுப்பாகியுள்ளனர்.

பலர், அன்வார்  சிரையில்  இருப்பதற்குக்  காரணமே  நஜிப்தான்  என்று  குற்றம்  சுமத்தினர்.

“எல்லாம் நாடகம். மலேசிய  மக்களிடம்  தம்மை  நல்லவர்  என்று  காண்பித்துக்  கொள்ளப்  பார்க்கிறார்”, என  சைட்  அப்டில்லா  அல்- அத்தாஸ்   பதிவிட்டிருந்தார்.

“அன்வாரை சுங்கை  பூலோவுக்கு  எளிதாக  அனுப்பி வைத்து விட்டு  இப்போது  ஹரி  ராயாவுக்கு  புத்ரா  ஜெயாவுக்கு  அழைக்கிறார்”, என  பாக்  சூ  லோய்  கூறினார்.

“கலந்துகொள்ளக்  கூடாது. அம்னோமீது  மக்கள்  கொண்டுள்ள  கோபத்தைக்  குறைக்கப்  பார்க்கிறார்”-  இது  முகம்மட்  லாமி.

“அன்வாரை இழிவுபடுத்தப்  பார்க்கிறார்கள். தங்களால்தான்  அவர்  சிறை  சென்றார்  என்பது  அவர்களுக்குத்  தெரியும். இப்போது  அழைப்பதுபோல்  நடிக்கிறார்கள்”-இது  பயஸ்  கே  பிரான்சிஸ்  பயஸ்.