ஹகாம்: தடைவிதிப்பு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது

ambikaதி  எட்ஜ் நாளிதழுக்கும்  வார  இதழுக்கும்  இடைக்கால தடை  விதிக்கப்பட்டிருப்பது  புத்ரா  ஜெயா  எதையோ  மூடிமறைக்கப்  பார்க்கிறது  என்ற  சந்தேகத்துக்கு  வலுவூட்டுவதாக  அமையும்  என  தேசிய  மனித  உரிமைக் கழகம்  எச்சரித்துள்ளது.

1எம்டிபி  பற்றி  விரிவாக  செய்திகள்  வெளியிட்டு  வந்த  அவ்விரு  செய்தித்தாள்களையும்  தடை  செய்திருப்பது  பொதுமக்கள்  அதைப் பற்றி  விவாதிப்பதைத்  தடுக்கும்  முயற்சியாகும்  என ஹகாம்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன்  ஓர்  அறிக்கையில் கூறினார்.

நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான  1எம்டிபி-இலிருந்து வணிகர்கள்  சிலர்  பல  பில்லியன்களைச்  சுருட்டிக்கொண்டதாக அவ்விரு  செய்தித்தாள்களும்  குற்றம்  சுமத்தியிருப்பது  பொதுமக்களின்  ஆர்வத்தைக்  கிளறிவிட்டிருக்கிறது.

“அரசாங்கம்  அக்குற்றச்சாட்டுகளுக்கு  பதிலளிக்க  விருப்பமின்றி அந்த  ஊடகத்தை  இழுத்து  மூட  முனைந்திருப்பது  பெரிய- அளவில் ஊழல்  நடந்திருக்கலாம்  என்ற  பொதுமக்களின்  சந்தேகத்தை உறுதிப்படுத்துகிறது”, என்றாரவர்.

வழக்குரைஞர்  மன்றத்தின்  முன்னாள்  தலைவரான  அம்பிகா, அவ்விரு  செய்தித்தாள்களுக்கும்  தடை  விதிக்கப்பட்டதற்கு அவை  வெளியிடும்  செய்திகள்  “பாரபட்சமானவை”  என்றும்  “பொதுநலனுக்குக்  கேடு  விளைவிப்பவை” என்றும் அதிகாரிகள்  கூறும்  காரணங்கள் ஏற்கத்தக்கவை  அல்ல  என்றார்.

“அரசாங்கம்  தன்னிச்சையாக ‘பொதுஒழுங்கு’ என்ற  கருத்தை  முன்வைத்து  அதன்பின்னே  ஒளிந்து கொள்வதை  அனுமதிக்க  இயலாது. இதே  காரணத்தைச்  சொல்லித்தான்  சில  நாள்களுக்குமுன்  சரவாக்  ரிப்போர்ட்  இணையத்தளமும்  முடக்கப்பட்டது.

“அரசாங்கம் இரகசியங்களை  வெளியிடுவோரை  அடக்கி வைக்கக்  கூடாது. மாறாக  அவர்களை  ஊக்குவித்து  உண்மைகளைக்  கண்டறிவதில்  ஒத்துழைக்க  வேண்டும். இதற்கு  மாறாக  நடந்துகொண்டால்  அரசாங்கம்தான்  ‘பொது  மற்றும்  தேசிய  நலனை’க்  கெடுக்கும்  வகையில்  நடந்துகொள்கிறது  என்றாகி  விடும்”, என்றாரவர்.