பத்திரிகைச் சுதந்திரத்துக்கு மிரட்டல் விடுப்பதை நிறுத்துவீர்

pressஅரசாங்கம்,  பத்திரிகைச்  சுதந்திரத்துக்கும்  கருத்துரைக்கும்  சுதந்திரத்துக்கும்  விடுக்கும்  மிரட்டல்களை  நிறுத்திக்கொள்ள  வேண்டும்  என அரசு-சாரா  அமைப்புகள்  கேட்டுக்கொண்டுள்ளன.

முற்போக்குத்  தொடர்புமுறை  சங்கமும்  பெர்சத்துவான்  கெசெடாரான் கம்முனிடி  சிலாங்கூரும் (எம்பவர்)  இன்று  விடுத்த  ஒரு கூட்டறைக்கையில்  மலேசியாவில்  செயல்படும்  இணையச்  செய்தித்  தளங்களைப்  பதிவு  செய்ய  வேண்டும்  என்று  சட்டம்  கொண்டுவர  அரசாங்கம்  திட்டமிட்டிருப்பதைக் கண்டித்தன.

“இது  மலேசியத்  தொடர்பு, பல்லூடக  ஆணையத்துக்கு ‘தேசிய  பாதுகாப்புக்கும்  நிலைத்தன்மைக்கு  மிரட்டல்’  என  அது  கருதும்  இணையத்  தளங்களை  முடக்கிப்  போடும்  அதிகாரத்தை  அளிக்கும்  என்பதால் மலேசியாவில்  கருத்துரைக்கும்  சுதந்திரமும்  கட்டுப்படுத்தப்படும்”, என்று அந்த  என்ஜிஓ-கள்  கூறின.

தொடர்பு, பல்லூடக  அமைச்சர் சாலே  சைட்  கெருவாக்  ஆபாசப்  படங்கள், இணைய  சூதாட்டம்,  ஐஎஸ் தீவிரவாதிகள்  மிரட்டல்  போன்ற  விவகாரங்களைக்  கருத்தில்  கொண்டே இணையச்   சீரமைப்பைக்  கொண்டுவர  எண்ணியிருப்பதாகக்  கூறியிருந்தாலும்  குறைகூறல்கள்  வெளிவருவதைத் தடுப்பத்தான்  இதன்  நோக்கம்  என்பது  என்ஜிஓ-களின்  கருத்து.

“மலேசியாவில் அடக்குமுறைச்  சட்டங்கள் மோசமாகிக்  கொண்டே  வருகின்றன. அவை இணைய  நடவடிக்கைகளையும்  குறி  வைத்து  செயல்படுகின்றன”, என்று  அவை  கூறின.