நூருல்: தந்தைக்குச் சிறையில் கெடுபிடிகள் அதிகரிக்கின்றன

prisonபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கைக்  கவிழ்க்கும்  சதித் திட்டம்  ஒன்று  இருப்பதாகக்  கூறப்பட்டதை  அடுத்து  சிறை  அதிகாரிகள்  அன்வார்  இப்ராகிமுக்கு  அதிகமதிகமான  கட்டுப்பாடுகளை   விதித்து  வருகிறார்களாம்.

இதனைச்  செய்தியாளர்களிடம்  தெரிவித்த  நூருல்  இஸ்ஸா  அன்வார்,  தம்  தந்தையார்  நீதிமன்றங்களுக்கு  வரும்போது  லிம்  கிட்  சியாங்,  ரபிஸி  ரம்லி,  சிலாங்கூர்  மந்திரி  புசார்  முகம்மட்  அஸ்மின்  அலி  போன்றோர்  அவரை  அணுகவோ  சந்திக்கவோ  சிறை  அதிகாரிகள்  அனுமதிப்பதில்லை  என்றார்.

“வழக்குரைஞர்களுடனான  சந்திப்புகளும்  குறைக்கப்பட்டு  விட்டன”, என்று  தெரிவித்த  அவர்,  நூலகம்  செல்ல  அன்வாருக்கு  வழங்கப்பட்ட  நேரமும்கூட  குறைக்கப்பட்டு  விட்டதாகக்  கூறினார்.  இதனால்  பெரும்பாலான  நேரத்தை  அவர்  சிறையில்  உள்ள  அறையிலேயே  செலவிடுகிறாராம்.

குடும்பத்தினருக்கு  அனுமதிக்கப்பட்ட  சந்திப்புகளின்  எண்ணிக்கையும்  குறைக்கப்பட்டு விட்டதாக  அவர்  சொன்னார். முன்புபோல்  அன்வார்  ஊடகங்களுக்கு  அறிக்கை  விட  முடியாது. அதுவும்  கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.