முகைதினின் துணைத் தலைவர் பதவிக்கு ஆபத்து?!

muhஅம்னோ  உச்சமன்றக்  கூட்டம்  நடைபெறவுள்ள  செப்டம்பர் 9ஆம்  நாள்  நெருங்கி  வரும்  வேளையில்  முகைதின்  யாசின்  அம்னோ  துணைத்  தலைவர்  பதவியிலிருந்து  தூக்கப்படலாம்  என்ற  வதந்தியும்  வலுத்து  வருகிறது.

இதைப்  பற்றி  தம்  வலைப்பதிவில்  எழுதியுள்ள  அம்னோ  சமூக  ஆர்வலர்  ஷாபுடின்  உசேன்,  உச்சமன்றக்  கூட்டத்தில் என்ன  நடக்கும்  என்பது  பற்றிப் பல்வகை  கருத்துகள் தெரிவிக்கப்பட்டாலும்  முகைதின்  வெளியேற்றப்படுவதற்கான அறிகுறிகளும்  தெரிவதாகக்  குறிப்பிட்டார்.

“கட்சியின்  மதிப்பைக்  கெடுத்து  விட்டார்  என்பதற்காகவும் 1எம்டிபி  மற்றும்  ரிம2.6 பில்லியன்  நன்கொடை  விவகாரத்தில் அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை அம்னோ  கூட்டங்களில்   வெளிப்படையாகவே  குறைகூறியதற்காகவும்  அவர்  பதவிநீக்கம்  செய்யப்படலாம்  என  எதிர்பார்க்கப்படுகிறது”, என  ஷாபுடின்  கூறினார்.

துணைத்  தலைவர்  பதவியிலிருந்து  முகைதினைத் தூக்கிவிட்டால்  கட்சியில்  அவரது  செல்வாக்கு  நீர்த்துப்போகும்  என்று  கருதப்படுவதாக  தெரிகிறது.

ஆனால்,  1எம்டிபி பற்றிக்  குறைகூறி  வந்துள்ள  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினரும்  சாபா  அம்னோவின்  துணைத்  தலைவருமான  ஷாபி  அப்டாலின்  பதவிக்கு  ஆபத்து  இல்லை. அவரது பதவியில்  கை  வைத்து  சாபா  ஆதரவாளர்களின்  கோபத்துக்கு  ஆளாகக்  கூடாது  என்ற  எச்சரிக்கைதான்  காரணம்.

உச்சமன்றக்  கூட்டத்துக்கு  முன்னதாகவே,  முகைதினின்  பதவிநீக்கத்துக்கு  மூன்றில் இரண்டு  பங்கு  ஆதரவு  திரட்டும்
முயற்சி  முடுக்கி  விடப்பட்டிருப்பதாக  ஷாபுடின்  தெரிவித்தார்.

“முகைதினைப்  பதவிநீக்கம்  செய்யக்  கோரும்  தீர்மானத்தை  மூத்த  கட்சி  உறுப்பினர்  ஒருவர்  கொண்டு  வருவார்  எனக்  கூறப்படுகிறது”.

உச்சமன்றக்  கூட்டத்தில்  முக்ரிஸ்  மகாதிர்,  ஜம்ரி  அப்துல்  காடிர்  ஆகியோரின்  மாநில  அம்னோ  தொடர்புக்குழுத் தலைவர்  பதவி  பறிபோகலாம்  என்றும்  ஷாபுடின்  கூறினார்.

முகிரிஸின்  இடத்தில், புதிய அமைச்சரான  மாஹ்ட்ஸிர்  காலிட்டும்  ஜம்ரிக்குப்  பதிலாக  துணைப்  பிரதமர்  அஹ்மட்  ஜாஹிட்  ஹமிடியும்  நியமிக்கப்படலாம்.