‘1எம்டிபி பற்றிப் பேச அஞ்சேன்’, முன்னாள் எஸ்பி அதிகாரி

sbபோலீஸ்  சிறப்புப்  பிரிவு  முன்னாள்  துணை  இயக்குனர்  அப்துல்  ஹமிட்   படோர்,  அப்பிரிவிலிருந்து  இடமாற்றம்  செய்யப்பட்டது பற்றிச்  செய்தியாளர்களிடம்  பேசியதற்காக என்ன தண்டனை  கொடுக்கப்பட்டாலும்  ஏற்கத்  தயாராக  உள்ளார்..

“கொஞ்சம்கூட  அஞ்சவில்லை.

“எந்தத்  தண்டனை  என்றாலும்  ஏற்கத்  தயார். நான்  ஒரு  போலீஸ்  அதிகாரி. அதற்குரிய  கண்ணியத்துடன்  நடந்து  கொள்வேன்”, என  அப்துல்  ஹமிட் தெரிவித்தார். அவருக்கு  விளக்கம்  கேட்டு  அனுப்பப்பட்டுள்ள  கடிதம்  பற்றி  வினவியதற்கு  அப்துல்  ஹமிட்  மலேசியாகினியிடம்  இவ்வாறு  தெரிவித்தார்.

போலீஸ்  படையிலிருந்து  பணிஇடமாற்றம்  செய்யப்பட்டது  பற்றிச்  செய்தியாளர்களிடம்  பேசியது   ஏன்  என்று  அப்துல்  ஹமிட்  விளக்கமளிக்க  வேண்டும்  என்று  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  நேற்று  கூறியிருந்தார்.

போலீஸ்  படையினருக்கான  கட்டுப்பாட்டு  விதிகளை மீறிச்  செய்தியாளர்களிடம்  பேசிய  அவருக்கு  எதிராக  ஒழுங்கு  நடவடிக்கை  எடுக்கப்படலாம்  என்றும்  காலிட்  கூறினார்.

இப்போது  விடுப்பில்  உள்ள  அப்துல் ஹமிட்  விளக்கம்- கேட்கும்  கடிதம்  கிடைத்ததும்  “அதற்குப்  பதில்  அளிக்கப்படும்” என்றார்.

அப்துல்  ஹமிட்,   பிரதமர்துறைக்கு திடீர் மாற்றம்  செய்யப்பட்டதும்  ஞாயிற்றுக்கிழமை  செய்தியாளர்  கூட்டமொன்றைக்  கூட்டினார்.

அக்கூட்டத்தில்  அவர்,  திடீரென்று  இடமாற்றம்  செய்யப்பட்டதற்கான  காரணத்தை  விவரித்தார்.  1எம்டிபி  மீதான  புலனாய்வில்  முழுக்க  முழுக்க  வெளிப்படைத்தன்மை  தேவை  என்று  தொடர்ந்து  வலியுறுத்தி  வந்ததால்தான் போலீஸ்  படையிலிருந்து  தூக்கப்பட்டதாக  அவர்  கூறினார்.