பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா, பிகேஆர் பாயான் பாரு எம்பி சிம் ட்ஸெ ட்ஸின் ஆகியோர் மீதும் மேலும் எழுவர்மீதும் #கித்தா லவான் பேரணியில் கலந்து கொண்டதற்காக அமைதிப் பேரணிச் சட்டம் (பிஏஏ) 2012-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் குற்றச்சாட்டை மறுத்தனர்.
அவர்களை ரிம500 பிணையில் விடுவித்த மெஜிஸ்திரேட் முகம்மட் பைசல் இஸ்மாயில், அவர்கள்மீதான வழக்கு அக்டோபர் 16-இல் விசாரணைக்கு வரும் என்று அறிவித்தார்.
அவர்கள் அமைதிப் பேரணிச் சட்டம் பகுதி 4(2) (சி)-இன்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இச்சட்டத்தின்க்கிழ் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் கூடின பட்சம் ரிம10,000 அபராதம் விதிக்கப்படலாம்.
அப்படி அபராதம் விதிக்கப்பட்டால் சிம் அவரது எம்பி தகுதியை இழப்பார்.
இதனிடையே, பார்டி அமானா நெகரா இளைஞர் பகுதித் தலைவர் முகம்மட் ஃபாக்ருல்ராஸிமீது கித்தா லவான் பேரணியில் அவர் ஆற்றிய உரைகளுக்காக தேச நிந்தனைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஃபாக்ருல்ராஸி அவரது உரையில், பிரதமரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரை மங்கோலியரான அல்டான்துன்யா ஷரீபுவின் கொலையுடன் தொடர்புப்படுத்திப் பேசினாராம்.
மேலும், அன்வார் இப்ராகிமுக்கு அவர் புரிந்த குற்றங்களுக்காக அல்லாமல் வெறுமனே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காகத்தான் தண்டனை வழங்கப்பட்டது என்றும் ஃபாக்ருல்ராஸி கூறினாராம்.