சுஹாகாம்: அமைதியாக ஒன்றுகூடுதல் ஓர் உரிமை, ஆனால் சட்டம் பின்பற்றப்பட வேண்டும்

 

suhakam Hasmy Agamஅமைதியாக ஒன்றுகூடும் சுதந்திரம் ஒவ்வொரு மலேசிய குடிமகனுக்கும்/குடிமகளுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமையைப் பயன்படுத்தும் போது அது சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு ஏற்றவாறு செய்யப்பட வேண்டும் என்று மலேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் ஹஸ்மி அஹம் கூறினார்.

ஆகவே, நாளை (செப்டெம்பர் 16) நடைபெற திட்டமிடப்பட்டுள்ள ஹிம்புனான் ராக்யாட் பெர்சத்து அமைதியான ஒன்றுகூடுதலின் கோட்பாடுகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.

பேரணியில் பங்கேற்பவர்கள் சட்டத்தை தங்களுடைய கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது. மாறாக, அவர்கள் அனைத்து மலேசியர்களின் பாதுகாப்பு, அமைதி மற்றும் பொது ஒழுங்கு ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டிய பொறுப்புடைய சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என்று ஹஸ்மி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

மேலும், பேரணி ஏற்பாட்டாளர் அதிகாரத்தினர்களுக்கு, குறிப்பாக போலீசாருக்கு, முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அப்போதுதான், பேரணி பங்கேற்பாளர்கள் பேரணியின் போது சட்டத்திற்கு ஏற்ப நடந்துகொள்வதை உறுதி செய்ய இயலும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இப்பேரணியின் செயல்பாடுகளை சுஹாகாம் கண்காணிக்கும் என்றும் அது சட்டத்திற்கு புறம்பான நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.