உங்களுக்குத்தான் எங்கள் உதவி அதிகம் தேவை: மசீச இளைஞர்களுக்கு அம்னோ அறிவுறுத்து

pasir gudangஅம்னோ  தலைவர் நஜிப்  அப்துல்  ரசாக்  ஹிம்புனான் ரக்யாட்  பெர்சத்து பேரணிக்கு  ஆதரவு  தெரிவித்தார்  என்பதற்காக அவருடன்  உறவுகளை  முறித்துக்கொள்வதாக  அறிவித்த  பாசிர்  கூடாங்  மசீச  இளைஞர்  பகுதியை அங்குள்ள  அம்னோ  இளைஞர்  அணி  சாடியுள்ளது.

அதன்  தலைவர்  அஸ்மான்  ஜாப்பார்,  பாசிர் கூடாங்  மசீச  இளைஞர்  பகுதி  அவசரப்பட்டு  நடந்து  கொண்டிருப்பதாகக்  கூறினார். அம்னோவுக்கு  மசீச  எவ்வளவு தேவையோ  அதைவிட  அதிகமாக  அம்னோவின் உதவிதான்  மசீசவுக்குத்  தேவை  என்பதை  அது  மறந்து  விட்டது  என்றாரவர்.

பொதுத்  தேர்தலில்  மசீசவின்  மோசமான  அடைவுநிலை  அதற்குச்  சீனச்  சமூகத்தின்  ஆதரவு  சரிந்து  விட்டதைக்  காண்பிக்கிறது.

“நடப்பில் உள்ள சீனர்களின்  ஆதரவை  நோக்கும்போது,  மசீசவின் பலவீனத்தை  மலாய்க்காரர்களைக்  கொண்டுதான்  சரிக்கட்ட  வேண்டியுள்ளது”.

ஹிம்புனான்  ரக்யாட்  பெர்சத்து  பேரணி  சட்டப்படிதான்  நடத்தப்பட்டது  என்று  கூறிய அவர்,  ஒன்றுகூடும்  உரிமை  அரசமைப்பு  அளிக்கும்  உரிமையாகும்  என்றார்.

“இது ஒன்றுபட  வேண்டிய  நேரம்  என்பதை  மசீச  இளைஞர்கள்  உணர  வேண்டும்.  இன  உணர்வுகளைத்  தூண்டிவிடக்  கூடாது.  அதைக்  கொண்டுதான்  எதிரணி  பிஎன்னை  உடைக்கப்  பார்க்கிறது”,  என்றவர்  சொன்னார்.