ரபிஸி பணி நீக்கம் என்பதை அஸ்மின் மறுக்கிறார்

dismissரபிஸி  ரம்லியை  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்   பதவியிலிருந்து   தூக்குவதற்கு  முயற்சிகள்  நடைபெறுவதாகக்  கூறப்படுவதை  பிகேஆர்  துணைத்  தலைவர்   முகம்மட்  அஸ்மின்  மறுத்தார்.

கட்சிக்குள் உள்சண்டை  கிடையாது  என்றும்  அது  நாளுக்கு  நாள்  வலுவடைந்து  வருகிறது  என்றும்  அவர்  சொன்னார்.

ரபிஸி  பற்றித்  தேவையற்ற  ஊகங்கள்  தெரிவிப்பதை  அனைத்துத்  தரப்பினரும்  நிறுத்த  வேண்டும்  சிலாங்கூர்  மந்திரி  புசாருமான  அஸ்மின்  கேட்டுக்கொண்டார்.

“நான்  ரபிஸியைத்  தற்காத்துப்  பேசுவதாக  நினைக்க வேண்டாம். அது  உண்மை  இல்லை  என்கிறபோது எதற்காக  ஊகங்கள்  தெரிவிக்க  வேண்டும்,  புரளியைக்  கிளப்பி  விட  வேண்டும்?”,என்றவர்  வினவினார்.

மலேசியன்  இன்சைடர் செய்தித்தளத்தில்  வெளிவந்த  ஒரு செய்தி,   புதிய  கூட்டணியான பக்கத்தான்  ஹராபான்  அமைக்கப்பட்டதில்  பிகேஆருக்குள்  பூசல்  உண்டாகியிருப்பதாகவும்  கட்சியில்  ஒரு  தரப்பு  ரபிஸி  ரம்லியைத்  தலைமைச்  செயலாளர்  பதவியிலிருந்து  அகற்ற  வேண்டுமென  விரும்புவதாகவும் கூறியிருந்தது.

இன்னொரு  செய்தி,  பாண்டான்  எம்பி-இன்  தலைவிதி  ஞாயிற்றுக்கிழமை  நடைபெறும்  தலைமை  மன்றக்  கூட்டத்தில்  முடிவு  செய்யப்படும்  என்று  கூறிற்று. மன்ற  உறுப்பினர்கள்  25பேர்  மகஜர்   சமர்ப்பித்ததை  அடுத்து  ஞாயிற்றுக்கிழமைக்  கூட்டம்  நடைபெறுகிறதாம்.