புதிய பிஏசி தலைவர் 1எம்டிபி பற்றி விசாரிக்கப் போகிறாரா, டோனி புவாவை வெளியேற்றப் போகிறாரா?

limபொதுக்  கணக்குக்  குழு (பிஏசி)  வின் புதிய  தலைவர்  ஹசான்  அரிப்பின் 1எம்டிபி-இன்  பின்னணியில்  உள்ள  உண்மைகளைக்  கண்டறிவதில்  உண்மையில்  கடப்பாடு  கொண்டிருக்கிறாரா  என  டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட் சியாங்  கேள்வி  எழுப்பியுள்ளார்.

பிஏசி-இல்  டோனி  புவா-வின்  நிலை  பற்றி  அக்குழுவின்  அடுத்த  கூட்டத்தில்  விவாதிக்கப்படும்  என்று  ஹசான்  கூறியதுதான்  லிம்மை  இவ்வாறு  கேள்வி  எழுப்ப  வைத்துள்ளது.. புவா  1எம்டிபி  பற்றி  குறைகூறி  வருவதாகவும்  பிஏசி  உறுப்பினரான  அவர்  நடுநிலையாக  நடந்து  கொள்வதில்லை  என்றும்  பிஎன் தலைவர்கள்  முறையிட்டதைத்  தொடர்ந்து  ஹசான்  அவ்வாறு  கூறியிருந்தார்.

“பிஏசி-இலிருந்து  புவாவை  வெளியேற்ற  வேண்டும்  என்று  விரும்பும்  பிஎன்  எம்பிகளை  அல்லது  அம்னோ  வட்டாரங்களை புவாவுக்கு  எதிராக  அவர்  பிஏசி  தகவல்களை  வெளியிட்டார்  எனப்  புகார்  செய்யுமாறு  ஹசான்  கேட்டுக்கொள்ள  வேண்டும்.

“அம்னோ  எம்பி  அல்லது  அதிகாரிகள்  புவாவுக்கு  எதிராக  அதிகாரப்பூர்வமாக  புகார்  செய்யவில்லை  என்றால் அரிப்பின்  அவரது  தலைமையில்  நடக்கப்போகும்  முதலாவது  பிஏசி  கூட்டத்தில்  புவாவின்  நிலை  பற்றி  விவாதிக்கப்  போவதாகக்  கூற  வேண்டிய  அவசியம்  என்ன?

“இங்குதான் ஒரு  கேள்வி  எழுகிறது.  புவாவை  1எம்டிபி  விசாரணையிலிருந்து  விலக்கி  வைக்க  முன்கூட்டியே  போடப்பட்ட  ஒரு  திட்டப்படி  அரிப்பின்  நடந்து கொள்கிறாரா”, என  லிம்  ஓர்  அறிக்கையில்  வினவினார்.

ஹசானுக்கு  முன்  பிஏசி  தலைவராக  இருந்த  நூர்  ஜஸ்லான்  முகம்மட்,  டிஏபி  எம்பியான  புவாவின்  பத்திரிகை  அறிக்கைகள் பிஏசி  தகவல்களை  அடிப்படையாகக்  கொண்டவை  அல்ல  என்றும்  அவை  வேறு  மூலங்களிலிருந்து  அவருக்குக்  கிடைத்தவை  என்றும்  கூறியுள்ளதை  லிம்  சுட்டிக்காட்டினார்.

“அரிப்பின்  பிஏசி  தலைவர்  என்ற  முறையில்  தான்  எடுத்து  வைக்கும்  ஒவ்வொரு  அடியையும்  மலேசியர்கள்  மட்டுமல்லாமல்  தகவலறிந்த  உலகமே  உன்னிப்பாகக்  கவனித்துக்  கொண்டிருப்பதை  உணர  வேண்டும்”, என்றாரவர்.