பிஏசி தலைவர் செய்தியாளர் கூட்டம் நடத்த மாட்டார்

hasanபொதுக் கணக்குக்குழு(பிஏசி)த்  தலைவர்  ஹசான்  அரிபின் பிஏசி  கூட்டங்களுக்குப்  பின்னர்  இனி   செய்தியாளர்களைச்  சந்திக்க  மாட்டார்.

அந்த  அளவுக்கு  ஊடகங்கள்மீது  அவர்  ஆத்திரம்  கொண்டுள்ளார்.

“பிஏசி  தலைவர்  என்ற  முறையில்,  ஊடகங்களிடம்  நட்புறவு  வைத்துக்கொள்ளும்  என்  முயற்சிகளைச்  சில  ஊடகவியலாளர்கள்  புரிந்துகொள்ளவில்லை  என்பதை  அறிந்து  ஏமாற்றம்  கொள்கிறேன்.

“நேற்றைய  செய்தியாளர்  கூட்டத்தில்  நான்  வேடிக்கையாகக்  கூறியதை  வெளியில்  சொல்ல  வேண்டாம்  என்று  நான்  கேட்டுக்கொண்டும்கூட  சில  ஊடகங்கள்  அவற்றின் செய்தித்தளங்களிலும்  செய்தித்தாள்களிலும்  அதை  வெளியிட்டிருக்கின்றன.

“எனவே, இனி  பிஏசி  கூட்டங்களுக்குப்  பிறகு  செய்தியாளர்  கூட்டங்கள்  நடத்தப்படாது”, என  ஹசான்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.

நேற்றைய  செய்தியாளர்  கூட்டத்தில்  1எம்டிபி  மீதான  பிஏசியின்  விசாரணைக்குப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கை  அழைக்கப்போவதில்லை  என்று  கூறப்பட்டிருப்பது  ஏன்  என்று  ஹசானிடம்  செய்தியாளர்கள்  வினவினர். அவர்  பதிலளிக்க  மறுத்தும்  அவரை  நெருக்கினார்கள்.  முடிவில்  அவர், “Jangan la, saya pun nak cari makan” (தயை  செய்து விடுங்கள். நானும்  வயிற்றுப்பாட்டுக்கு வழி பண்ன  வேண்டி இருக்கிறது) என்றார்.

பின்னர்,  அவர்,  ஊடகங்களுக்கான விருந்தில் “உணவு  தேடுவதைத்தான்”  அப்படிக்  கூறியதாக  ஒரு  விளக்கத்தை  அளித்தார். அது  வேடிக்கையாக  சொல்லப்பட்டது  என்றும்  உரைத்தார்.

ஆனால்,  ஹசான்  அதைச்  செய்தியாக  வெளிடக்  கூடாது என்று  சொல்லவில்லை.