தவறாக தடுத்துவைக்கப்பட்ட டெக்சி ஓட்டுனர்: போலீஸ் அதிகாரமீறலுக்கு ஓர் எடுத்துகாட்டு

yongஒரு  சிறுவன்  கடத்தப்பட்ட  சம்பவம்  தொடர்பில்  டெக்சி   ஓட்டுனர்  ஹனிசான்  முகம்மட்  ரட்ஸி  தவறாகத்  தடுத்து  வைக்கப்பட்டது “போலீஸ்  அதிகாரம்  தவறாகப்  பயன்படுத்தப்படுவதற்கு  நல்ல  எடுத்துக்க்காட்டு”  என  கெராக்கான்  இளைஞர் தலைவர்  எண்டி  யோங்  கூறினார்.

கடத்தலுக்கு  ஆளான  சிறுவன்  தெருவில்  சுற்றிக்கொண்டிருப்பதைக்  கண்ட  ஹனிசான், சிறுவனை  அழைத்துச்  சென்று  அவனது  வீட்டில்  ஒப்படைத்தார்.  ஆனால்.  போலீசார்  அவர்தான்  சிறுவனைக்  கடத்திச் சென்றவர்  எனக்  குற்றஞ்சாட்டி   ஹனிசானைக்  காவலில்  வைத்து  விட்டனர். பிறகு  அவர்  குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டார்.

நேற்று  நிலப் பொதுப்  போக்குவரத்து  ஆணையம்(ஸ்பாட்) ஹனிசானின்  செயலைப்  பாராட்டி  அவருக்குச்  சிறப்பு  விருது  வழங்கிச்  சிறப்பித்தது.

ஆனாலும்,  போலீசின்  நடவடிக்கை  அவரின் குடும்பத்துக்கு  மிகுந்த  சங்கடத்தை  ஏற்படுத்தி  விட்டது  என  வழக்குரைஞரும்  கெராக்கான்  வழக்குரைஞர்  குழுத்  தலைவருமான  யோங்  கூறினார்.

இப்படி  நடப்பது  முதல் முறை  அல்ல  என்று  கூறிய  யோங், சட்டவிரோதமாகக்  கைது  செய்யப்படுபவர்கள்  அவர்களின்  உரிமைகளை  உணர  வேண்டும்  என்றார்.

“இது  அநியாயம். இப்படியே  விட்டால்  போலீஸ்  அவர்களின்  விருப்பம்போல்  நடந்துகொள்ள  இது  வழிகோலும்”, என்றாரவர்.

கைது  செய்வதற்கு  போலீஸ்  தகுந்த  ஆதாரங்களைக்  காண்பிக்க  வேண்டும்.

“குற்றம்  செய்யாமலேயே  தடுத்து  வைக்கப்படுவோர்  அவர்களின்  உரிமைகளை  உணர்ந்து  தவறாகக்  கைது  செய்யப்பட்டதற்காக  சட்ட  நடவடிக்கை  எடுப்பது  பற்றியும்  ஆலோசிக்க  வேண்டும்”, என  யோங்  கூறினார்.