சுஹாகாம்: நாடாளுமன்ற குழுவுக்கு போதிய அவகாசம் கொடுக்கப்பட வேண்டும்

தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய முன்மொழியப்பட்டிருக்கும் நாடாளுமன்ற சிறப்புக்குழு அவ்விவகாரம் மீது பல்வேறு அமைப்புகள் வழங்கியிருக்கும் கருத்துகளை விசாலமாக விவாதிக்க போதிய அவகாசம் கொடுக்கப்படும் என்று நம்புவதாக மலேசிய மனித உரிமைகள் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

அக்குழு அமைக்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருந்ததை வரவேற்ற சுஹாகாமின் தலைவர் ஹஸ்மி அகாம், சுஹாகாம் அதன் 2007 ஆம் ஆண்டு அறிக்கையில் தேர்தல் சுயேட்சையாகவும் நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்.

அனைத்து ஊடகங்களுக்கும் சமமான வாய்ப்பளித்தல், நீண்ட தேர்தல் பரப்புரைக்கான அவகாசம் மற்றும் தகுதியுடைய அனைத்து வாக்காளர்களும் இயல்பாகவே பதிவு பெறுதல் ஆகியவை அந்தப் பரிந்துரைகளில் அடங்கும் என்றாரவர்.