எதிரணியினரை ஒடுக்கும் நடவடிக்கைக்குப் பன்னாட்டு பொது மன்னிப்பு அமைப்பு கண்டனம்

aiகோலாலும்பூரில்   ஆசியான்  உச்சநிலைக்  கூட்டம்  நடைபெறும்  வேளையிலும்  மலேசியா தேசிய  நிந்தனைச்  சட்டத்தைக்  கொண்டு  எதிரணித்  தலைவர்களை ஒடுக்கும்  நடவடிக்கைகளில்  ஈடுபடுவதை  Amnesty International எனப்படும்  பன்னாட்டு  பொதுமன்னிப்பு  அமைப்பு(ஏஐ)  கண்டித்துள்ளது.

“பேச்சுரிமையைப்  பயன்படுத்தியதற்காக  எதிரணி  அரசியல்வாதி(முன்னாள்  பிஎஸ்எம்) தலைமைச் செயலாளர்  எஸ்.அருட்செல்வன்மீது  குற்றம்சாட்டுவதைத்  தவிர்க்குமாறு பன்னாட்டு  பொதுமன்னிப்பு அமைப்பு  மலேசிய  அதிகாரிகளைக்  கேட்டுக்கொள்கிறது.

“உலகின்  கண்கள்  மலேசியா  ஏற்று  நடத்தும்  ஆசியான் தலைவர்கள்  கூட்டத்தை  உன்னிப்பாகக்  கவனித்துக்  கொண்டிருக்கும்  வேளையில்கூட  அதிகாரிகள்  அரசாங்கத்தை  எதிர்த்துப்  பேசுவோருக்கு  எதிரான  அடக்குமுறையை  விடாது தொடர்கிறார்கள்”, என ஏஐ வட்டார  துணை  இயக்குனர்  ஜோசப்  ரோய்  பெனடிக்ட்   ஓர்  அறிக்கையில்  கூறினார்.

வியாழக்கிழமை  கைதான  அருட்செல்வனிடம்  திங்கள்கிழமை  அவருக்கு  எதிராக  தேச  நிந்தனைக்  குற்றச்  சட்டத்தின்கீழும்  தொடர்பு, பல்லூடகச்  சட்டத்த்ன்கீழும் குற்றம்  சாட்டப்படும்  எனத்  தெரிவிக்கப்பட்டது.

முன்னாள்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிமின் குதப்புணர்ச்சி  வழக்கில்  நீதிமன்றத்  தீர்ப்பைக்  கண்டனம்  செய்து  அறிக்கை  வெளியிட்டதற்காக  அருட்செல்வன்மீது வழக்கு  தொடரப்படுவதாக  தெரிகிறது.