ஜாகிம் பற்றிய கருத்தில் உறுதியாக இருக்கிறார் தவ்பிக்; சிறை செல்லவும் தயார்

tawfikதேச நிந்தனைக்  குற்றச்சாட்டை  எதிர்நோக்கும்  அபாயம்  இருக்கிறது  என்றாலும்  மலேசிய  இஸ்லாமிய  மேம்பாட்டுத்  துறை (ஜாகிம்)  குறித்து  தாம்  தெரிவித்த  கருத்தில் உறுதியாக  இருக்கிறார்  தவ்பிக்  இஸ்மாயில்.  தவ்பிக்  முன்னாள்  துணைப்  பிரதமர்  டாக்டர்  இஸ்மாயில்  அப்துல்  ரஹ்மானின்  புதல்வராவார்.

அதன்  பொருட்டு  தேச  நிந்தனைக்  குற்றச்சாட்டையும்  எதிர்கொள்ளவும்  தயாராக  இருப்பதாக  தவ்பிக்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“சிறை  என்றாலும்  சரிதான். என்  தந்தை  பிரிட்டிஷாரின்  ஆதிக்கத்திலிருந்த  நாட்டின்  விடுதலைக்குப்  போராடினார். நான் அரசமைப்பு  வழங்கும்  குடிமக்களின்  உரிமைக்காக  போராடுவேன்”, என்றாரவர்.

ஜாகிமை  இரத்துச்  செய்ய  வேண்டும்  என்றும்   அரசமைப்பின்படி  அதற்கு  இடமில்லை  என்றும்  தவ்பிக்  கூறியதாக  இணைய  செய்தித்தளம்  ஒன்றில்  வெளிவந்த  செய்தியை  அடுத்து  அவர்மீது  புகார்  செய்யப்பட்டு  போலீசார்  அவர்மீது  விசாரணையைத்  தொடங்கியிருப்பதாக  மலேசியன்  இன்சைடர்  தெரிவித்தது.

முன்னாள்  உயர்  அரசு  அதிகாரிகளைக்  கொண்ட குழுவான  ஜி25-இன்  உறுப்பினர்களில்  ஒருவருமான  தவ்பிக்,  சமய  விவகாரங்களில்  சுல்தான்களின்  அதிகாரத்தை  எடுத்துக்  கொள்வது  ஏன் என்பதற்கும்  ஜாகிமும்  அதன்  ஆதரவாளர்களும்  பதிலளிக்க  வேண்டும்  என  வலியுறுத்தினார்.