அம்னோ மாறாவிட்டால், மக்கள் அம்னோவை மாற்றுவார்கள், முகைதின் கூறுகிறார்

 

 அம்னோ புற்றுநோயால் பீடிக்கப்பட்டிருக்கிறது. அந்த புற்றுநோய் கூறுகள் அகற்றப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று அம்னோ துணைத் தலைவர் முகைதின் யாசின் இன்று கூறினார்.

“அம்னோவுக்குள்ளிருக்கும் புற்றுநோயாளிகள் நிராகரிக்கப்பட வேண்டும்”, என்று கோலாலம்பூர் கம்போங் பாரு சுல்தான் சுலைமான் கிளப்பில் கூடியிருந்த ஆதரவாளர்களின் பலத்த ஆரவாரத்துக்கிடையில் முகைதின் கூறினார்.

நஜிப்பின் பெயரை நேரடையாகக் குறிப்பிடாமல் பேசிய அவர், “நேர்மையின்மை என்ற கடுமையான பிரச்சனையால் அம்னோ பீடிக்கப்பட்டிருக்கிறது”, என்று கூறினார்.

“அம்னோ மாறாவிட்டால், மக்கள் அம்னோவை மாற்றுவார்கள். அது வருத்தமளிக்கிற உண்மையாகும்”, என்றாரவர்.

நஜிப் பதவி துறக்க வேண்டும் என்று கோரும் உரிமை தமக்கு இல்லை என்று கூறிய முகைதின், சமூக ஊடகங்கள் எவ்விதத் தூண்டுதலும் இல்லாமல் அவ்வாறு கோரியுள்ளன என்றார்.

நஜிப் பதவி துறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் என்றதை கேட்டதுமே அங்கிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

 

அம்னோ தலைவர் பதவி இரு தவணைகளுக்கு மட்டுமே

 

நேர்மையற்ற, பேராசை பிடித்த தலைமைத்துவத்துவத்தினால் விளையும் சுமையை ஏன் மக்கள் சுமக்க வேண்டும் என்று அவர் வினவினார்.

மக்களின் நம்பிக்கையைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமானால், பண அரசியலையும் வேறூன்றிப்போன வேண்டியவர்களுக்கு ஆதரவளிக்கின்ற முறையையும் விட்டொழிக்க வேண்டும். கட்சியை வழிநடத்துபவர் உயர்ந்த நன்னெறி பண்புடையவராக இருக்க வேண்டும் என்றாரவர்.

அதிகார அத்துமீறல்களை தவிர்ப்பதற்கு அம்னோ தலைவர் பதவி இரு தவணைக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இன்றிரவு பேசியதற்கு தாம் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.