நஜிப்பின் ரிம2.6 பில்லியன்மீது வழக்கு தொடுக்க அனினாவுக்குச் சட்டத் தகுதி இல்லை

legalஅம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  வங்கிக்  கணக்கில்  சேர்ப்பிக்கப்பட்ட  ரிம2.6 பில்லியன் தொடர்பில்  வழக்கு  தொடுக்கும்  தகுதி   முன்னாள்  லங்காவி  அம்னோ  உறுப்பினர்  அனினா  சாடுடினுக்குக்  கிடையாது  என  நஜிப்பையும்  அம்னோ  நிர்வாகச்  செயலாளர்  அப்துல்  ரவுஃப்  யூசுப்பையும்  பிரதிநிதிக்கும்  வழக்குரைஞர்  இன்று  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றத்தில்  கூறினார்.

அனினா  ஆகஸ்ட்  28-இல்  அவ்வழக்கைத்  தொடுத்தார்.  அவர்  அப்பணம்  அல்லது  அதில்  மீதமிருப்பது  கட்சியிடம்  ஒப்படைக்கப்பட   வேண்டும்  என்று  கோரியிருக்கிறார்.

அவர்  தொடுத்த வழக்கைத்  தள்ளுபடி  செய்ய  வேண்டும்  என  நஜிப்பும்  ரபுஃபும்  மனுச் செய்திருக்கிறார்கள்.

அம்னோ  வழக்குரைஞர்  முகம்மட்  ஹபாரிஸாம்  ஹருன்,  அந்த  வழக்கை  நீதிமன்றம்  விசாரிக்க  முடியாது  என்றார். ஏனென்றால்   அரசியல்  கட்சி  சம்பந்தப்பட்ட  விவகாரங்களில்  தலையிடும்  அதிகாரம்  நீதிமன்றத்துக்குக்  கிடையாது.

“அது  1966 சங்கங்கள்  சட்டம்  பகுதி  18 சி-க்கு  எதிரானது.. அச்சட்டப்படி  இவ்வழக்கை  விசாரிக்கும்  அதிகாரம்  நீதிமன்றத்துக்கு  இல்லை. மேலும், கட்சித்  தலைவருக்கும்  கட்சிப் பொறுபாளர்  ஒருவருக்கும்  எதிராக  வழக்கு தொடுத்த  கணமே  அனினா  கட்சி  உறுப்பினர்  தகுதியை  இழந்து  விட்டார்”, என  ஹபாரிஸாம்  கூறினார்.

அதே  சட்டம்  பகுதி  9(சி)-இன்கீழ்  வழக்கு  தொடுக்கும்  சட்டத்  தகுதி  இல்லை  என்றும்  அவர்  சொன்னார்.