போலீஸ்: சுங்கை பீசியில் டோல் கட்டண எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சட்டவிரோதமானது

sbesiபுத்தாண்டுக்கு  முதல்நாள்  சாலைக்கட்டண  உயர்வுக்கெதிராக சுங்கை  பீசி  டோல்  சாவடியில்  நடத்தத்  திட்டமிடப்பட்டிருக்கும்  ஆர்ப்பாட்டம்  தொடர்பில்  ஏற்பாட்டாளர்கள்  முறையான  விண்ணப்பங்களை  இன்னும்  செய்யவில்லை.

“அவர்கள் முறையாக  விண்ணப்பம்  செய்யவில்லை  என்றால்  அது  குற்றமாகும்.

“இதுவரை  விண்ணப்பம்  எதையும்  பெறவில்லை. ஆனால், (ஆர்ப்பாட்டம் பற்றி)  தகவல்  கிடைத்துள்ளது. நிலவரத்தைக்  கண்காணித்து  வருகிறோம்”, என  சிலாங்கூர்  போலீஸ்  தலைவர்  அபு  சாமா  மாட்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

சுங்கை  பீசி  டோல்  சாவடி  ஆர்ப்பாட்டம்  நடத்த  பொருத்தமான  இடம்  அல்ல  என்றும்  அவர்  சொன்னார்.

இதனிடையே,  ஆர்ப்பாட்டத்துக்கு  ஏற்பாடு  செய்துள்ளவர்களில்  ஒருவரான  ஷஸ்னி  முனிர்  முகம்மட்  இத்னின்,  தாங்கள்  ஆர்ப்பாட்டத்துக்கு  அனுமதி  கேட்டு  மனுச்   செய்ய  முயன்றதாகக்  கூறினார்.

“மனு  கொடுத்தபோது அலுவலக  நேரம் தாண்டி  விட்டதால்  அதை  அதிகாரி  பெற்றுக்கொள்ள  மறுத்தார்”, என்றவர்  கூறினார்.

அடுத்த  ஆண்டில்  கிள்ளான்  பள்ளத்தாக்கில்  எட்டு  சாலைகளில்  டோல்  கட்டணம்  உயர்த்தப்படும்  வாய்ப்பிருப்பதை  எதிர்த்து  டிசம்பர்  31  இரவு மணி  ஒன்பதுக்கு  டோல்-எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்துக்குத்  திட்டமிடப்பட்டிருக்கிறது.