புவா: மேலும் ரிம27மில்லியன் பிரதமர் கணக்கில் மாற்றிவிடப்பட்டிருப்பதை ஏஜி ‘காட்டிக்கொடுத்து விட்டார்’

chartஎஸ்ஆர்சி இண்டர்நேசனல் நிறுவனத்திலிருந்து மேலும் ரிம27 மில்லியன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் கணக்குக்குச் சென்றிருப்பதைச் சட்டத்துறைத் தலைவர் முகம்மட் அபாண்டி அலி, தன்னை அறியாமலேயே அம்பலப்படுத்தி விட்டார்.

இந்தக் கூடுதல் பணப் பட்டுவாடா நேற்று செய்தியாளர் கூட்டத்தில் அபாண்டி அலி கையில் வைத்திருந்த ஒரு விளக்க அட்டவணை மூலமாக தெரிய வந்ததாக டிஏபி எம்பி டோனி புவா கூறினார்.

2014 ஜூலையில்  எஸ்ஆர்சி -இலிருந்து  ரிம35 மில்லியன்  ஒரு கட்டுமான நிறுவனத்துக்கும் அதன் துணை நிறுவனத்துக்கும் மாற்றி விடப்பட்டிருப்பதை அந்த விளக்க அட்டவணை காண்பித்தது.

அதில் ரிம27 மில்லியன் நஜிப்பின் வங்கிக் கணக்குக்குச் சென்றது.

“அது நஜிப்பின் கடனட்டைக் கடன்களைச் செலுத்த பயன்படுத்திக் கொள்ளப்பட்டது”, என புவா நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.