ஜிஎஸ்டி-ஆல் விலை உயர்வு என்ற தப்பெண்ணத்தை உடைக்கும் முயற்சியில் சுங்கத்துறை

customsஅரச மலேசிய சுங்கத்துறை பொருள், சேவை வரிதான் விலைவாசி உயர்வுக்குக் காரணம் என்ற எண்ணத்தை உடைத்தெறிய கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது.

நெறிகெட்ட வியாபாரிகள்தான் விலை உயர்வுக்குக் காரணம் எனச் சுங்கத்துறை தலைமை இயக்குனர் கசாலி அஹ்மட் கூறினார். அவர்கள்தான் காரணமில்லாமல் பொருள்களின் விலைகளைக் உயர்த்தி விட்டார்கள்.

“விலை உயர்வுக்கு அரசாங்கத்தின்மீது பழி போடாதீர்கள். நெறிதவறிய வியாபாரிகளே அதற்குக் காரணம்”, என்றாரவர்.

“பெட்ரோல் விலை கூடியபோது தே தாரிக் விலையை 10சென் உயர்த்தினார்கள். ஆனால், எண்ணெய் விலை விழுந்தபோது அவர்கள் ஏன் தே தாரிக் விலையைக் குறைக்கவில்லை?”,என்றவர் வினவினார்.

இது தவிர, அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு குறைந்ததும் இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்வும் பணவீக்கத்தை உண்டு பண்ணியது என கசாலி அஹ்மட் கூறினார்.

“ஆனால், எப்படியோ ஜிஎஸ்டிதான் விலை உயர்வுக்குக் காரணம் என்ற எண்ணம் நிலைத்து விட்டது”, என்று கூறியவர் அந்த எண்ணத்தைப் போக்குவது சிரமம்தான் என்றார். கசாலி இன்று சிலாங்கூர், கிளானா ஜெயாவில் உலக சுங்கத்துறை தினத்தில் கலந்து கொண்டார்.

“நாங்கள் எப்போதும் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களிடம் உண்மையைச் சொல்லி வருவோம். இது ஒன்றைத்தான் எங்களால் செய்ய முடியும்”, என்றார்.