மகாதிர்: மார்ச் 27-இல் ‘பிரதமரை வெளியேற்று’ கூட்டத்தில் கலந்து கொள்வேன்

blockமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்,  மார்ச்  27-இல்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கு  எதிரான கூட்டத்தில்  கலந்துகொள்வதை  உறுதிப்படுத்தினார்.

முன்னாள்  சட்ட  அமைச்சர்  ஜைட்  இப்ராகிம்  ஏற்பாடு  செய்துள்ள  கூட்டம்  அது. அதில்  கலந்துகொள்ள  அழைக்கப்பட்டுள்ள  பெருமக்களில்  மகாதிர்  முக்கியமானவர்.

“அதில்  அவர்கள்  பேசச்  சொன்னால்  பேசுவேன்”, என்றவர்  கூறினார்.

அரசாங்கத்துக்கு  எதிராகக்  கருத்துத்  தெரிவிப்பதற்காக  இருந்த  மற்ற  இடங்கள்  எல்லாம்  அடைபட்டிருப்பதால்  பேரணிகளில்  கலந்துகொள்வதைத்  தவிர  வேறு  வழி  இல்லை  என  மகாதிர்   குறிப்பிட்டார். அவர்  பிரதமராக  இருந்தபோது  இதை  எதிர்த்து  வந்தார்  என்பது  குறிப்பிடத்தக்கது.

“இப்போது  நிலைமை  மாறிவிட்டது.  முன்பு   அரசாங்கத்துக்கு  எதிர்ப்பைத்  தெரிவிக்க  பல  அரங்குகள்  இருந்தன. இப்போது  அவை  இல்லை,  பேரணிகள்  மட்டுமே  அனுமதிக்கப்படுகின்றன”, என்றார்.

“மக்கள்  அறைக்குள்  கூட்டம்  நடத்துவதைக்கூட  தடுக்கிறார்கள். முன்பு  அதற்கு  அனுமதி  உண்டு. இப்போது  முடியாது. அதாவது  மக்கள்,  அரசாங்கம்  சொல்வதைக்  கேட்டுக்  கொண்டுதான்  இருக்க  முடியும். பேசுவதற்கு  இடம்  இல்லை”.