டிஎம்ஐ தடைக்கு அரசாங்கம் கூறும் காரணம் ‘சிறுபிள்ளைத்தனமானது’: கிட் சியாங் சாடல்

infant“அமைதி,  நிலைத்தன்மை,  நல்லிணக்கம்”  ஆகியவற்றைக் கருத்தில்  கொண்டே  த  மலேசியன்  இன்சைடர்  செய்தித்தளத்தைத்  தடை  செய்ததாக   ஒரு  “சிறுபிள்ளைத்தனமான,  அறிவிலித்தனமான”  காரணத்தை  முன்வைத்த  மலேசிய  அரசாங்கத்தைப்  பார்த்து  உலகம்  சிரிக்கிறது  என  எதிரணித்  தலைவர்  ஒருவர்  சாடியுள்ளார்.

“அது  மலேசிய  அரசாங்கம்  அதன்  59-ஆண்டுக்கால  வரலாற்றில்   கொஞ்சமும்  யோசிக்காமல்  வெளியிட்டிருக்கும் மடத்தனமான  அறிக்கை”,  என  டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்  கூறினார்.

டிஎம்ஐ  செய்தித்தளம்  முடக்கப்பட்டதை   அமெரிக்கா  குறைகூறியதை  அடுத்து  அமைதியையும்  நிலைத்தன்மையையும்  நல்லிணக்கத்தையும்  கட்டிக்காக்க  புத்ரா  ஜெயா  அதைச்  செய்ய  வேண்டியதாயிற்று  என  வெளியுறவு  அமைச்சு  நேற்று  விளக்கம்  அளித்திருந்தது.

வெளியுறவு  அமைச்சைக்  கண்டித்து  அறிக்கை  வெளியிட்ட  கிட்  சியாங்  இணையத்தில்  தணிக்கை  இல்லை  என்று  அரசாங்கம்  வழங்கிய  உத்தரவாதம்  என்னவாயிற்று  என  வினவினார்.