ஆஸ்திரேலியாவின் ஏபிசி நிறுவனம், பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் ரிம2.6 பில்லியன் முறைகேடு பற்றிக் கேள்விகேட்க முனைந்து அதற்காக மலேசியப் போலீசாரால் கைது செய்யப்பட்ட அதன் செய்தியாளர்களைத் தற்காத்துப் பேசியுள்ளது.
“கூச்சிங்கில் அவர்கள் தப்பாக நடந்து கொள்ளவில்லை. செய்தி சேகரிக்கும் பணியைத்தான் செய்தார்கள். அச்சம்பவம் அதிகாரிகளிடம் கேள்வி கேட்பது உள்பட ஊடகச் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.
“லிண்டனும் லூயும் அவர்களின் பணியைத் தொடர்கிறார்கள். ‘Four Corners’ நிகழ்ச்சிக்கான செய்திகளைத் திரட்டி வருகிறார்கள். இன்னும் சில வாரங்களில் அவர்களின் முழு அறிக்கை வெளிவரக் காத்திருக்கிறோம்”, என ஏபிசி செய்தி இயக்குனர் கேபன் மோரிஸ் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

























