லிம்: பங்களா வீடு பற்றிய உண்மை வெளிவருவதை அம்னோ விரும்பவில்லை

truth பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்,  தாம்  வீடு  வாங்கியது  பற்றியும்  தாமான்  மங்கிஸ்  நில  விவகாரம்  பற்றியும்  தம்முடைய  விளக்கத்தைக்  கேட்காமலேயே  அம்னோ  தம்மீது  தொடர்ந்து  குற்றம்  சாட்டி  வருவதாக கூறினார்.

“அவர்கள்தான்  சவால்  விடுத்தார்கள். சாவலை ஏற்றேன்.  விவாதத்தின்போது  இந்த  விவகாரங்களை  எல்லாம்  விளக்கலாம்  என்பதால்  ஒப்புக்கொண்டேன்.

“கடைசி  நேரத்தில்  பின்வாங்கினார்கள்.  விவாதத்தை இரத்துச்  செய்தார்கள். அவர்கள்  இதுவரை  போட்டதெல்லாம் நாடகம்தான்  என்று  நினைக்கிறேன்”, என்று  லிம்  கூறினார்.

நேற்று,  அம்னோ  தகவல்  தலைவர்  அனுவார்  மூசா,  அந்த  வீட்டை  லிம்  வாங்கியது  “நன்னெறி  சார்ந்த  செயலல்ல”  என்று  குற்றம்  சாட்டினார்.

“அவர்  அந்தச்  சொத்துக்குக்  கொடுத்த  விலை  நியாயமற்றது  என்பதை  உலகமே  அறியும்.

“அவர் மட்டும்  முதலமைச்சர்  பதவியில்  இல்லாதிருந்தால்  அந்த  பங்களாவை  அந்த  விலைக்கு  வாங்கியிருக்க  முடியாது….10  அல்லது  20  விழுக்காடு  (குறைவாக)  என்றால்  பரவாயில்லை. ஆனால், இது  கிட்டதட்ட  பாதி  விலையாயிற்றே”, என்றவர்  சொன்னார்.

2009-இலிருந்து  அந்த  வீட்டில்  வாடகைக்குக்  குடியிருந்து  வரும்  லிம்,  சில  ஆண்டுகளுக்கு  முன்பே  ரிம2.8 மில்லியனுக்கு  அந்த  வீட்டை  வாங்க  அதன்  உரிமையாளருடன்  உடன்பாடு  செய்து  கொண்டதாகக்  குறிப்பிட்டார்.

தாமான்  மங்கிஸ்  அரசு  நிலத்தை  விற்பதற்குக்  கைம்மாறாகத்தான்  பங்களா  வீடு  லிம்முக்குக்  குறைந்த  விலையில்  விற்கப்பட்டது  என  அம்னோ  குற்றம்  சாட்டி  வருகிறது.

லிம்  அதை  மறுக்கிறார்.